வணக்க வழிபாடுகளில் நிய்யத்தை வாயால் மொழிவது குறித்து மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன? – 02

بسم الله الرحمن الرحيم

நிய்யத்தை வாயால் மொழிவது குறித்து ஒரு சில அறிஞர்களின் கருத்துக்களை இங்கு நான் முன்வைக்கின்றேன்.

1. இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவின்படி நிய்யத்தை பகிரங்கப்படுத்துவது கட்டாயமான ஒன்றுமல்ல மற்றும் விரும்பத்தக்க ஒன்றுமல்ல. மாறாக நிய்யத்தை பகிரங்கப்படுத்துபவர் பித்அத்வாதியாவார், மார்க்கத்திற்கு முரணாகச் செயற்பட்டவராவார். இவ்வாறு மார்க்கத்தில் உண்டு என நம்பியவராக இதை ஒருவர் செய்தால் அவர் ஒரு மடையராவார், வழிகெட்ட ஒருவருமாவார். ஒழுக்கமூட்டப்படுவதற்கும் அவர் தகுதியானவராவார். அவ்வாறு இல்லையென்றால் அதற்காக வேண்டி அவர் தண்டிக்கப்படுவதற்கு தகுதியடைவார்.

2. அஷ்ஷெய்க் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: நிய்யத்தை வாயால் மொழிவது பித்அத்தாகும். அதை பகிரங்கமாகக் கூறுவது பாவத்தில் கடுமையானதாகும். உள்ளத்தால் நிய்யத் வைப்பதே சுன்னாவாகும். ஏனென்றால், அல்லாஹ் இரகசியத்தையும் மறைவானவற்றையும் அறியக்கூடியவனா இருக்கின்றான். அவனே பின்வருமாறு கூறுகின்றான்: நபியே! நீங்கள் அல்லாஹ்வுக்கே உங்களுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொடுக்கின்றீர்களா? அல்லாஹ்வோ வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் அறியக்கூடியவனாக இருக்கின்றான் எனக்கூறுங்கள்.

நிய்யத்தை வாயால் மொழிவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டோ அவர்களுடைய தோழர்களில் ஒருவரைத்தொட்டோ பின்பற்றப்பட்ட இமாம்களைத்தொட்டோ உறுதி செய்யப்படவில்லை. ஆகவே, இது மார்க்கத்தில் இல்லாத ஒன்று என்பதை இதன் மூலம் அறியப்பட்டுவிட்டது. மாறாக இது உருவாக்கப்பட்ட பித்அத்களில் ஒன்றைச் சார்ந்ததாகும்.

3. அஷ்ஷெய்க் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: நிய்யத்துடைய இடம் உள்ளமாகும். அதை வாயால் மொழிவது பித்அத்களில் ஒரு பித்அத்தாகும். இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் இதை ஆகுமாக்கினார் என்று இடம்பெற்ற செய்தி சரியான ஒன்றல்ல. அதை ஆகுமாக்கியவர்கள் ஷாபிஈ மத்ஹபைச்சார்ந்த பிற்காலத்து அறிஞர்களில் சிலராவர்.

4. அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: நிய்யத்தை வாயால் மொழிவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலோ ஸலபுகளின் காலத்திலோ அறியப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. அது மனிதர்கள் உருவாக்கியவற்றில் ஒன்றாகும்.

5. அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: தொழுகையின் நிபந்தனைகளில் ஒன்றே நிய்யத்தாகும். அறபு மொழி அடிப்படையில் நிய்யத் என்றால் நாடுதல் என்பதாகும். மார்க்க அடிப்படையில் அல்லாஹ்வின் பக்கம் நெருங்குதல் என்ற அடிப்படையில் ஒரு வணக்கத்தைச் செய்ய உறுதிகொள்ளல் என்பதாகும். அதனுடைய இடம் உள்ளமாகும். அதை வாயால் மொழியத்தேவையில்லை. மாறாக, அது பித்அத்தாகும். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அவர்களுடைய தோழர்களோ இதைச் செய்யவில்லை. எனவே, ஒருவர் தான் நாடும் தொழுகையை தனது உள்ளத்தால் நிய்யத் வைக்க வேண்டும்.

அன்பின் வாசகர்களே! நாம் மேலே குறிப்பிட்ட தகவல்களில் இருந்து நிய்யத்தை வாயால் மொழிவது பித்அத்தான அம்சம் என்பதை நல்லமுறையில் புரிந்து கொண்டிருப்பீர்கள். எனவே, நீங்கள் புரிந்து கொண்ட சத்தியத்தின் அடிப்படையில் காரியமாற்ற எம்மனைவருக்கும் அல்லாஹ் துணை நிற்பானாக!

- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்