لا حول ولا قوة إلا بالله என்ற வார்த்தையைப் பற்றித் தெரிந்து கொள்வோம்! – 03

  1. அல்லாஹ்வுக்கு வார்த்தைகளில் மிக விருப்பமானதாக இருக்கும்.

நபியவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வுக்கு வார்த்தைகளில் மிக விருப்பமானது:

سبحان الله ، لا شريك له، له الملك، وله الحمد، وهو على كل شيء قدير، ولا حول ولا قوة إلا بالله، سبحان الله وبحمده

என்பதாகும். (அதபுல் முப்ரத்)

  1. யார் இவ்வார்த்தையைக் கூறுகின்றாரோ, அவருடைய இரு கரங்களையும் நலவைக் கொண்டு அல்லாஹ் நிரப்பிவிடுவான்.

ஒரு மனிதர் நபியவர்களிடத்தில் வந்து, "நிச்சயமாக நான் அல்குர்ஆனில் இருந்து எந்த ஒன்றையும் எடுத்துக் கொள்ள முடியாதவனாக உள்ளேன். எனவே, அதனில் இருந்தும் எனக்குப் போதுமாக்கிக் கொள்ளக்கூடிய ஒன்றை எனக்குக் கற்றுத்தாருங்கள்!" என்றார். அதற்கு நபியவர்கள்:

سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم

என்று கூறுமாறு பணித்தார்கள். அப்போது அவர்: "அல்லாஹ்வின் தூதரே! இது அல்லாஹ்வுக்குரியது, எனக்குரியது எது?" என வினவினார். அதற்கு நபியவர்கள்:

اللهم ارحمني وارزقني وعافني واهدني

என்று கூறுமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அம்மனிதர் தனது கையால் "இவ்வாறு தானே!" என்று கூறியவராக எழுந்து செல்ல நாடிய போது நபியவர்கள்: "இவரைப் பொருத்தளவில் தனது கரத்தை நலவைக் கொண்டு நிரப்பிவிட்டார்" என்றார்கள். (அபூ தாவுத்)

  1. மறுமையில் பிரயோசனம் எதிர்பார்க்கப்படுகின்ற எஞ்சியிருக்கும் நல்ல காரியமாகக் கருதப்படும்.

நபியவர்கள் கூறினார்கள்: "நீங்கள் எஞ்சியிருக்கும் ஸாலிஹான நல்லமல்களை அதிகரித்துக் கொள்ளுங்கள்!" அப்போது: "அல்லாஹ்வின் தூதரே! அவை என்ன?" என்று வினவப்பட, "அவை நபிமார்களின் மார்க்கமாகும்" என்று பதிலளித்தார்கள். அதற்கு தோழர்கள்: "அல்லாஹ்வின் தூதரே! அது என்ன? எனக் கேட்டார்கள். அப்போதும் நபியவர்கள் அதே பதிலை அளித்தார்கள். மறுபடியும் தோழர்கள் அதே கேள்வியைத் தொடர, "தக்பீர் கூறுவதும், لا إله إلا الله என்று கூறுவதும், தஸ்பீஹ் செய்வதும், அல்லாஹ்வைப் புகழ்வதும், لا حول ولا قوة إلا بالله என்று கூறுவதுமாகும்" என்றார்கள். (அஹ்மத்)

எனவே, கண்ணியத்துக்குரிய சகோதர சகோதரிகளே! எம்முடைய வாழ்நாளின் கால எல்லையைக் கருத்திற்கொண்டு, நன்மைகளை அதிகரித்துக் கொள்ளக் கூடிய நடவடிக்கைகளில் களமிறங்க வேண்டிய தேவையில் நாம் அனைவரும் இருக்கின்றோம். அந்தவிதத்தில் சிறிய அமல்களின் மூலமாக கூடிய நன்மைகளைத் பெற்றுத்தரக்கூடிய காரியங்களைத் தேடி செயலுருப்படுத்துவது புத்திசாலித்தனமாகும். அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்பாக்கியங்களைப் பெற்றிட அருள்பாளிப்பானாக!