விசபச்சாரத்தை நெருங்காதீர்கள்! – 02

بسم الله الرحمن الرحيم

விபச்சாரத்தை நோக்கி இட்டுச் செல்லக்கூடிய காரணிகள்

  1. பார்வையைத் தாழ்த்தாதிருத்தல்.

நாம் வாழும் சூழலில் அலங்காரத்துடன் காட்சியளிக்கும் அன்னியப் பெண்களின் நடமாட்டம் பரவலாகக் காணப்படுகின்றது. திரையரங்குகள், கைபேசிகள் மற்றும் கடைத்தெருக்கள் எனப் பலவாறான இடங்களில் இந்நிலையைக் காண முடிகிறது. எனவே, இப்படியான நிலையில் அன்னியப் பெண்கள் எம்முன்னிலையில் தோன்றும் போது நாம் எம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நடந்துகொள்வது ஷைத்தானின் விபச்சாரத்திற்குரிய வாசலை அடைப்பதாக அமைகிறது.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "(நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும், தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிக்காத்துக் கொள்ளவும்,அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்". (அந்நூர்: 30)

இறைவிசுவாசியே! உன்னுடைய உள்ளம் பலவீனமானது. பார்வையானது இப்லீஸின் ஈட்டிகளில் ஒன்று என்பதை எப்போதும் உன் மனதில் கொண்டு செயற்படு!

  1. ஆண்பெண் கலப்பு

ஆண்பெண் கலப்பும் விபச்சாரத்திற்கு வழி வகுக்கின்றது. ஆண்பெண் ஒன்றாக இணைந்து கற்பது,தொழில் புரிவது போன்றன பல தீய விளைவுகளை உண்டாக்குகின்றன. சமகால நிகழ்வுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

நபியவர்கள் கூறினார்கள்: "பெண்களுக்கு மத்தியில் நுழைவதை விட்டும் நான் உங்களை எச்சரிக்கின்றேன்! அப்போது ஒரு மனிதர்: அல்லாஹ்வின் தூதரே கணவனின் நெருங்கிய ஆண் உறவினர்களைப் பற்றி யாது கூறுகிறீர்கள்? என்று வினவ, கணவனின் நெருங்கிய ஆண் உறவினர்கள் மரணத்திற்கு ஈடாகும் என்றார்கள்". (புகாரி, முஸ்லிம்)

  1.  அன்னியப் பெண்களுடன் தனித்திருத்தல்.

அன்னியப் பெண்களுடன் தனித்திருப்பதும் விபச்சாரத்தைத் தூண்டக்கூடியதாக உள்ளது. அவ்வாறு தனித்திருக்கும் செயல் இன்று எம்சமுகத்திற்கு மத்தியில் பலவாறான அமைப்புக்களில் காணப்படுகின்றது. அந்தவிதத்தில், வாகனத்தில் தனிமையாக சாரதியுடன் பயனித்தல், தொழில் புரியும் இடங்களில் சக தொழிலாளியுடன் தனித்திருத்தல், உறவினர்கள் வீடுகளில் திருமணம் முடிக்க அனுமதிக்கப்பட்ட பெண்களுடன் தனித்திருத்தல் என்று பட்டியல்படுத்திக் கொண்டே போகலாம். இத்தகைய செயலை எச்சரிக்கும் முகமாக நபியவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள்:

"உங்களில் ஒருவர் அன்னியப் பெண்ணொருத்தியுடன் அவளுடைய மஹ்ரமான ஆண் துணையின்றி தனித்திருக்க வேண்டாம்". (புகாரி, முஸ்லிம்)

ஏனெனில், பெண்களானவர்கள் பித்னாவுக்குரியவர்கள் அவர்கள் மூலம் பித்னா ஏற்படாதவாறு நாம் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.

நபியவர்கள் கூறினர்கள்: "ஆண்களுக்கு மிகவும் தீங்களிக்கக் கூடியவர்களாக எனக்குப் பிறகு பெண்களை நான் விட்டுவிட்டுச் சென்றுள்ளேன்". (புகாரி)

மேலும் நபியவர்கள் கூறினார்கள்: "உலகவாழ்வைப் பயந்து கொள்ளுங்கள்! பெண்களையும் பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக பனூ இஸ்ரவேலர்களின் ஆரம்ப பித்னா பெண்கள் மூலமே ஏற்பட்டது". (முஸ்லிம்)

விபச்சாரத்தின் படித்தரங்கள்

விபச்சாரத்தின் படித்தரங்களை இமாம் அல்ஹய்ஸமி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வகைப்படுத்திக் கூறியுள்ளார்கள்.

  1. கணவன் இல்லாத அன்னியப் பெண்ணுடன் செய்யும் விபச்சாரம்.
  2. கணவன் இருக்கக்கூடிய அன்னியப் பெண்ணுடன் செய்யும் விபச்சாரம்: இவ்வகை விபச்சாரம் ஆரம்பமாகக் கூறப்பட்ட விபச்சாரத்தைவிட அபாயகரமானது. ஏனெனில், இவ்வகை விபச்சாரத்தில் இரு வகையான உரிமைகள் மீறப்படுகின்றன. ஒன்று அல்லாஹ்வுடைய உரிமை, மற்றொன்று அவளுடைய கணவனின் உரிமையாகும்.
  3. மஹ்ரமான பெண்ணுடன் செய்யும் விபச்சாரம்: இன்றைய கால சூழ்நிலையில் இவ்வகை விபச்சாரம் பரவிவருவதை அவதானித்திருப்பீர்கள்.
  4. வயோதிபப்பருவத்தில் இருப்பவர் செய்யும் விபச்சாரம்: இத்தகைய பருவத்தில் இருப்பவர் செய்யும் விபச்சாரமானது இளம் பருவத்தில் உள்ளவர் செய்யும் விபச்சாரத்தை விடக் கடுமையானது. அதனால் தான் நபியவர்கள் இப்படிப்பட்ட விபச்சாரிகள் குறித்துக் கூறும் போது, அல்லாஹ் அவர்களுடன் மறுமை நாளில் போசமாட்டான் என்றும், அவர்களைப் பார்க்கமாட்டான் என்றும், அவர்களைத் தூய்மைப்படுத்தமாட்டான் என்றும், அவர்களுக்கு நோவினை தரும் வேதனை இருப்பதாகவும் கூறியுள்ளார்கள்.
  5. அண்டை வீட்டார் மனைவியுடன் செய்யும் விபச்சாரம்: நபியவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் பத்துப் பெண்களுடன் விபச்சாரம் செய்வது, தனது அண்டை வீட்டாரின் மனைவியுடன் விபச்சாரம் செய்வதைவிட மிக இலகுவானதாக இருக்கும்". (அஹ்மத்)
  6. சங்கை மிக்க மாதங்களில் செய்யும் விபச்சாரம்.
  7. மக்கா, மதீனா ஹரம் எல்லைக்குள் செய்யும் விபச்சாரம்.

எனவே, விபச்சாரம் விடயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எங்களால் இப்பாவம் நிகழாமலும், எங்களது பொறுப்பில் உள்ளவர்களாலும் இப்பாவாம் நிகழாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், விபச்சாரத்தை நாடுவோர் இப்பாவச் செயல் தனது தாய், மனைவி, பெண்மக்கள் மற்றும் குடும்பப் பெண்கள் ஆகியோரில் நிகழ்வதை விரும்புவோமா? என்பதைக் கேள்வியாகக் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளனர் என்பதையும் நினைவில் கொள்க!

الحمد لله رب العالمين

-    அபூ ஹுனைப் (மதனி)