சந்தோசமும் அது உண்டாவதற்குக் காரணங்களாகத் திகழ்கின்றவையும் – 01

بسم الله الرحمن الرحيم

சந்தோசம் என்பது மனித வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும். எனவே, சந்தோசத்தை விரும்பாத எவரும் இருக்க முடியாது. மக்கள் சந்தோசத்தை பல அளவுகோல்களில் மட்டிட்டு வைத்திருந்தாலும் அவற்றுள் எது எதார்த்தமான சந்தோசம் என்பதை அவசியம் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதனைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் வேண்டும்.

ஸகாபாக்களைப் பொருத்தளவில் அவர்கள் இது விடயத்தில் நல்ல முன்னுதாரணம் மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள். அதனால் தான் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களிடத்தில் வந்து: "அல்லாஹ்வின் தூதரோ! மறுமைநாளில் உங்களுடைய சிபார்சைக் கொண்டு மனிதர்களில் மிகவும் மகிழ்ச்சிக்குரியவர் யார்?" என்று வினவினார்கள். (புகாரி) அந்த அடிப்படையில் நாமும் உண்மையான மகிழ்ச்சி எது என்பதைப் பற்றித் தெரிய வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளளோம்.

சந்தோசத்தைப் பொருத்தளவில் அதனில் இவ்வுலக மற்றும் மறுஉலக சந்தோசங்கள் உள்ளடங்குகின்றன. இவ்விரு உலகங்களினதும் சந்தோசமானது மார்க்கம் சிலாகித்துக் கூறிய அமைப்பில் தான் இருக்க வேண்டுமே அன்றி இன்று மனிதர்கள் கற்பனை செய்து வைத்திருக்கின்ற அமைப்பில் அல்ல!

இன்று மக்கள் ஒருவர் சந்தோசத்துடன் இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக சில அளவுகோள்களை வைத்திருக்கிறார்கள். சிலர் எவரிடத்தில் அதிகமாகப் பணம் குவிகின்றதோ அவரிடத்தில் சந்தோசம் இருப்பாதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மற்றும் சிலர் எவரிடத்தில் பட்டம் பதவி காணப்படுகின்றதோ அவரிடத்தில் தான் சந்தோசம் இருப்பதாக நினைக்கின்றனர். வேறு சிலர் ஒருவர் ஏதாவது ஒரு துறையை துறைபோகக் கற்று, பயிற்சி எடுத்து அத்துறையில் திறமைசாலியாக ஆகின்றாரோ அவரிடத்தில் தான் சந்தோசம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்து வெறும் கற்பனைகளேயன்றி எதார்த்தம் அன்று!

மாற்றமாக, இத்தகையவர்கள் அளவுகோலாக எடுத்துக் கொண்டவை அவர்களிடத்தில் காணப்பட வேண்டிய மார்க்கத்துடனான பற்றை நாசமாக்கக்கூடியன என்பதை நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.

நபியவர்கள் கூறினார்கள்: "ஆட்டு மந்தைகளுக்கு மத்தியில் பசித்த இரு ஓநாய்கள் அனுப்பப்பட்டால் அவை அம்மந்தைகளுக்கு ஏற்படுத்தும் சேதத்தைவிட மிகப் பெரிய அளவிலான சேதத்தை மனிதனிடத்தில் காணப்படுகின்ற பணம் மற்றும் கௌரவம் மீதான ஆசை அவனுடைய மார்க்கத்தில் ஏற்படுத்திவிடும்." (திர்மிதி)

இச்செய்தியின் மூலமாக மனிதனிடத்தில் காணப்படும் பணம், கௌரவம் மீதான ஆசை அவனுடைய மார்க்கத்தை நாசாமாக்கிவிடும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இப்படியான ஆபாயகரமாக இருவிடயங்களை எப்படி மனிதன் சந்தோசத்தின் அளவுகோல்களாக எடுத்துக் கொள்வான்?!

மாறாக, எதார்த்தமான சந்தோசமானது அல்லாஹ்வுடைய அன்பு மற்றும் அவனது திருப்பொருத்தம் ஆகியவற்றைக் கொண்டே ஏற்படுகின்றது. இவ்விரு விடயங்களும் ஒன்றிணைந்தவரின் வாழ்க்கை உண்மையான சந்தோசத்தின் விலாசமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனவே, நாம் அல்லாஹ்வின் அன்பையும் திருப்பொருத்தத்தையும் தேடித்தரக்கூடிய காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருப்போமென்றால் ஹதீஸுல் குர்ஸியில் (புகாரி) அல்லாஹ் கூறுவதைப் போன்று: நாம் கேட்கும் காதுகளாகவும், பார்க்கும் கண்களாகவும், பிடிக்கும் கரங்களாகவும், நடக்கும் கால்களாகவும் அல்லாஹ் இருப்பான். நிச்சயமாக இவையெல்லம் உண்மையான மகிழ்ச்சியைப் பெறுகின்ற மக்களின் அடையாளங்களாகும்.

சந்தோசம் உண்டாகக்கூடிய வழிகள்

எதார்த்தமான சந்தோசம் உண்டாகக் கூடிய வழிகளை எம்முடைய உலமாக்கள் தொகுத்து வழங்கியுள்ளார்கள். அவ்வாறு அவர்கள் தொகுத்தளித்த சில வழிகளை இங்கு நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

1.            அல்லாஹ்வை ஈமான் கொள்வதும் நல்லமல்களில் ஈடுபடுவதும்.

நாம் அல்லாஹ்வை ஈமான் கொண்டு, நற்காரியங்களில் ஈடுபாடுடையவர்களாக இருந்தால் நிச்சயமாக அதன் காரணத்தினால் எங்களுக்கு மத்தியில் உண்மையான சந்தோசம் உண்டாகும். அல்லாஹ் கூறுகின்றான்: "ஆண் அல்லது பெண்ணாகிய ஒருவர் விசுவாசங்கொண்டவராக இருக்க, யார் நற்செயலைச் செய்தாரோ நிச்சயமாக நாம் அவரை நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். இன்னும், நிச்சயமாக அவர்களுக்கு அவர்களது கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிக அழகானதைக் கொண்டு நாம் கொடுப்போம்." (அந்நஹ்ல்: 97)

2.            அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருக்கு பதிலளித்தல்.

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எம்மை நோக்கி அழைப்பு விடுக்கும் போது நாம் அதற்குப் பின்வாங்காமல் பதிலளிப்பதும் எம்முடைய வாழ்க்கையில் சந்தோசம் ஏற்படக் காரணமாக அமையும். அல்லாஹ் கூறுகின்றான்: "விசுவாசங் கொண்டோரே! உங்களை வாழவைப்பதன் பால் (அல்லாஹ்வின் தூதராகிய) அவர் உங்களை அழைத்தால் அல்லாஹ்வுக்கும் (அவனுடைய) தூதருக்கும் பதில் அளியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய இதயத்திற்கும் மத்தியில் சூழ்ந்து (செயலாற்றிக் கொண்டு) இருக்கிறான்." (அல்அன்பால்: 24)

உண்மையில் நபியவர்களின் தோழர்களின் வாழக்கை வரலாற்றை வாசிக்கும் போது அவர்கள் எந்த அளவுக்கு அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மிக வேகமாக பதிலளிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அந்தவிதத்தில் நபியவர்கள் செருப்பு அணிந்து கொண்டு தொழுவதைக் கண்டவுடன் அவர்களும் செருப்பணிந்து தொழக்கூடியவர்களாகவும், தொழுகையில் செருப்பைக் கழற்றுவதைக் கண்டவுடன் அவர்களும் செருப்பைக் கழற்றக்கூடியவர்களாகவும் இருந்ததை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

மேலும், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுவதைப் போன்று நபியவர்கள் தங்கத்திலான மோதிரத்தை அணிந்த போது ஸஹாபாக்களும் தங்கத்தினால் மோதிரம் அணிய முற்பட்டார்கள் என்றும் நபியவர்கள் அதனை அணியாதுவிட்ட போது அவர்களும் அதனை அணியாமல் விட்டார்கள் என்ற செய்தியும் இதற்கு வலுவூட்டுகின்றது.

மேலும், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், "ஒரு முஸ்லிம் இரு இரவுகளை கழிப்பதாக இருந்தாலும் தனது வஸிய்யத்தை எழுதாமல் கழிக்கக்கூடாது" என்ற ஹதீஸைச் செவிமடுத்து அதன் படி செயலாற்றிவிட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்: "நபியவர்களின் சொல்லைக் கேட்ட நாள் முதல் என்னிடத்தில் வஸிய்யத் எழுதப்படாமல் எந்தவோர் இரவையும் நான் கழித்ததில்லை" என்கிறார்கள்.

3. அல்லாஹ்வை திக்ரு செய்தல்

உண்மையில், அல்லாஹ்வை திக்ரு செய்வதும் சந்தோசம் உண்டாவதற்குக் காரணமாகத் திகழ்கின்றது. திக்ர் செய்வதின் மகிமை தொடர்பாக அல்லாஹுத்தஆலா பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்.

"(இத்தகுதிக்குரியோர்) எத்தகையோரென்றால், அவர்கள் (மெய்யாகவே) விசுவாசங் கொண்டோர்கள். இன்னும், அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வை நினைவுகூர்வதால் இதயங்கள் நிச்சயமாக அமைதிபெறும் என்பதை அறிந்து கொள்வீர்களாக!" (அர்ரஃது: 28)

மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்பவரே உலகில் உண்மையாக உயிர்வாழ்பவராகக் கூடக் கருதப்படுவார். நினைவு கூறாத மற்ற அனைவரும் வெறும் பிணங்களாக அன்றி வேறில்லை. இதனைப் பின்வருமாறு நபியவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

"தன்னுடைய இரட்சகனை ஞாபகிக்கும் மனிதனுக்கும், தன்னுடைய இரட்சகனை ஞாபகிக்காத மனிதனுக்கும் உரிய உதாரணம், உயிருடன் உள்ளவரும் மரணித்தவரும் ஆவார்கள்." (அறிவிப்பவர்: அபூமூஸா ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

எனவே, நாங்கள் விடாது அல்லாஹ்வை திக்ரு செய்யக்கூடிய மக்களாக இருக்க வேண்டும். அப்போது அதனுடைய நலவுகள் அனைத்தும் எம்மை வந்தடையும்.

நபியவர்கள் கூறினார்கள்: "உன்னுடைய நாவு அல்லாஹ்வை திக்ரு செய்வதின் மூலம் எப்போதும் செழுமையாக இருக்கட்டும்." (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு புஸ்ர், ஆதாரம்: திர்மிதி)

4. நன்மையை எதிர்பார்த்துப் பொறுமையாக இருத்தல்.

மனிதன் தன் வாழ்வில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் பொறுமையை எதிர்கொள்ளகிறான். எனவே, அச்சந்தர்ப்பங்களில் அவன் அல்லாஹ்விடத்தில் கூலியை எதிர்பார்த்து பொறுமையாக இருப்பான் என்றால் அதன் காரணமான மகத்தான பல நலவுகளை தன் வசப்படுத்திக் கொள்வான்.

அல்லாஹ் கூறுகின்றான்: "பொறுமையாளர்கள் தங்களுடைய கூலியை நிறைவு செய்யப்படுவதெல்லாம் கணக்கின்றியே தான் என்று (நபியே!) நீர் கூறுவீராக!" (அல்ஜுமர்: 10)

5. அல்லாஹ் எமக்களித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துதல்.

அல்லாஹ் எமக்களித்த அருட்கொடைகளுக்காக அவனுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு நன்றி உணர்வுடன் நாம் நடப்போமென்றால் நிச்சயமாக அதன் காரணமாகவும் எமக்கு மத்தியில் சந்தோசம் உண்டாகும். அருட்கொடைகள் குறித்து நாம் எமது நன்றியை வெளிப்படுத்தும் போதே அல்லாஹுத்தஆலா எம்மை ஞாபகப்படுத்துகின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான்: "ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்! நானும் உங்களை (அருள் புரிந்து) நினைவு கூறுவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்! இன்னும் எனக்கு மாறுசெய்யாதீர்கள்!" (அல்பகறா: 152)

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் மென்மேலும் அவன் எங்களுக்கு அதிகப்படுத்தித்தருவான்.

அல்லாஹ் கூறுகின்றான்: "அன்றியும் உங்கள் இரட்சகன் (இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (என் அருளை) நிச்சயமாக உங்களுக்கு அதிகப்படுத்துவேன்." (இப்றாஹீம்: 7)

உண்மையில் நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் போது அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றிமிக்க அடியார்களாகத் திகழ்ந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹுத்தஆலா நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் தொடர்பாகக் கூறும் போது: "நிச்சயமாக அவர் (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார்" (பனீ இஸ்ராயீல்: 3) என்கிறான்.

மேலும் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றிக் கூறும் போது: "(அல்லாஹ்வாகிய) அவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார்" (அந்நஹ்ல்: 121) என்கிறான்.

மேலும் தாவூத், ஸுலைமான் அலைஹிமஸ்ஸலாம் அவர்களைப் பற்றிக் கூறும் போது: "தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வியைக் கொடுத்தோம். 'விசுவாசங் கொண்ட தன்னுடைய (நல்ல) அடியார்களில் அநேகரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்' உரியது என்று அவ்விருவரும் கூறி (நன்றி செலுத்தி)னார்கள்" (அந்நம்லு: 15) என்கிறான்.

எங்களுடைய நபியான முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அவர்கள் கூட தனதிரு காற்பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று வணங்கியுள்ளார்கள். அது தொடர்பாக ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் வினவிய போது நான் ஒரு நன்றியுள்ள அடியானாக ஆகக் கூடாதா? என பதிலளித்தது இவ்விடயத்திற்கு மென்மேலும் வலு சேர்க்கிறது. (புகாரி, முஸ்லிம்)

மேலும் நபியவர்கள் தன் தோழர்களுக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துமாறு வஸிய்யத்து செய்துள்ளார்கள். அந்தவிதத்தில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்குத் தனக்கு உதவி புரியுமாறு கேட்கும் ஒரு துஆவை நபியவர்கள் முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.