இஸ்லாத்தின் பார்வையில் மோதிரம் – 06

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்ஹ் யஹ்யா அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

"திருமணம் நிச்சயிக்கப்படுகின்றபோது வழங்கப்படும் நிச்சயதார்த்த மோதிரத்தைப் பொறுத்தவரையில், திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்பதற்கு அதனை அடையாளமாக வைத்துக் கொள்வதும், கணவர் தலாக் சொன்னால் அவர் பிரிந்து விட்டார் என்ற அடிப்படையில் அதைக் கழற்றுவதும் காபிர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் செயலாகும்”. (அல்கன்ஸுஸ் ஸமீன்)

அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

"நிச்சயதார்த்த மோதிரத்தைப் பொறுத்தவரையில் அது முஸ்லிம்களின் வழமைகளில் உள்ள ஒன்றல்ல. இந்த மோதிரம் திருமணத்தை முன்னிட்டு அணியப்படக்கூடிய ஒன்றாகும். இந்த மோதிரம் கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் விருப்பத்தை ஏற்படுத்துவதற்கான காரணம் என்றும், அதைக் கழற்றுவது அல்லது அணியாமல் இருப்பது கணவன், மனைவிக்கிடையிலான தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை கொண்டால் அது ஷிர்க்கைச் சார்ந்ததாகக் கருதப்படும். மேலும் அது ஜாஹிலிய்ய நம்பிக்கையில் நுழைத்துவிடும். எனவே, எச்சந்தர்ப்பத்திலும் நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவது கூடாது.

முதலாவதாக: ஏனென்றால், அது நலவில்லாத மனிதர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் செயலைச் சார்ந்தது. இது முஸ்லிம்களிடம் தூதாக வந்த வழமையாகும். முஸ்லிம்களின் வழமையைச் சார்ந்ததல்ல.

இரண்டாவதாக: கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான தொடர்பில் இது தாக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை சேர்ந்திருந்தால் இது விடயத்தில் ஷிர்க் நுழையும். வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்”. (அல்முன்தகா மின் பதாவல் பவ்ஸான்)

அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

"நிச்சயதார்த்த மோதிரம் என்று அழைக்கப்படக்கூடிய ஆண்கள் அணியும் தங்க மோதிரத்தைப் பொறுத்தவரையில் அது காபிர்களின் செயல்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாக அமைவதுடன் அவர்களிடம் இந்த வழிமுறை கிறிஸ்தவர்களிடமிருந்தே வந்தது. அவர்களிடம் காணப்பட்ட பழமை வாய்ந்த ஒரு வழமையின்பால் இவ்விடயம் திருப்புகின்றது. திருமண வைபவங்களின்போது கணவனுடைய இடக்கரத்தின் பெருவிரலின் உச்சிப் பகுதியில் அம்மோதிரம் வைக்கப்படும். அந்த நேரத்தில் கணவர்: தந்தையின் பெயரைக் கொண்டு எனக் கூறுவார். பின்பு அதை சுட்டு விரலின் உச்சிப்பகுதியில் வைத்து விடுவார். அந்த நேரத்தில் அவர் மகனின் பெயரைக் கொண்டு எனக் கூறுவார். பின்பு அதை நடு விரலின் உச்சிப்பகுதியில் வைப்பார். அந்த நேரத்தில் அவர் ரூஹுல் குத்ஸின் பெயரைக் கொண்டு எனக் கூறுவார். ஆமீன் சொல்லப்படுகின்ற நேரத்தில் அதை அவர் ஆழி விரலில் தரிபடுமாறு வைத்துக் கொள்வார்”. (ஆதாபுஸ் ஸிபாப்)

அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

"நான் இதற்கு எந்த அடிப்படையையும் அறியமாட்டேன். இது முஸ்லிம்களின் வழிமுறையில் இருக்கவில்லை. இது கிறிஸ்தவர்களின் வழமையைச் சார்ந்ததே என்று நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். இன்னும், இந்த வழமை மனிதர்களிடம் லெபனான் போன்ற நாடுகளிலிருந்தே வந்தது என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். இதை விடுவது அவசியமாகும் என்று நான் கருதுகின்றேன். காபிர்களுக்கு ஒப்பாகுவதை விட்டும் இதுவே மிக ஏற்றமானதும் தூரமானதுமாகும். எங்களுடைய ஸலபுஸ் ஸாலிஹீன்கள் இதைச் செய்பவர்களாக இருந்தார்கள் என்றும் நாம் எத்திவைக்கப்படவில்லை. பெண் பேசப்பட்டு அவளுக்கு முடியுமான மஹரைக் கொடுக்க முற்பட வேண்டும். இதுவே போதுமானது. ஆனால் நிச்சயதார்த்த மோதிரம், வளையலைப் பொறுத்தவரையில் அதற்கு எந்த அடிப்படையும் இல்லை”. (பதாவா நூரின் அலத்தர்ப்)

சஊதி அல்லஜ்னதுத் தாஇமா அறிஞர்கள் கூறுகின்றார்கள்:

"இதற்கு இஸ்லாத்தில் எந்த அடிப்படையும் இல்லை. மாறாக, இது பித்அத்தாகும். முஸ்லிம்களில் மடையர்களும் பலவீனமானவர்களும் இது விடயத்தில் காபிர்களிடம் இருக்கக்கூடிய வழமையை கண்மூடித்தனமாகப் பின்பற்றியுள்ளனர். இது தடுக்கப்பட்டது. ஏனெனில், காபிர்களுக்கு ஒப்பாகக்கூடிய விடயம் அதில் இருக்கின்றது. இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள்”. (பத்வா இலக்கம்: 4127)

2. வுழூச் செய்யும்போது அல்லது கடமையான குளிப்பை மேற்கொள்ளும்போது மோதிரத்தைக் கழற்ற வேண்டுமா?

இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் "வுழூச் செய்பவர் மோதிரத்தை அசைக்க வேண்டுமா?” என வினவப்பட்டது. அதற்கவர்கள்: "அது (விரலுடன்) ஒட்டியதாக இருந்தால் அதை அசைத்துக் கொள்வது கடமையாகும். அது விசாலமானதாக இருந்தால் (அசைப்பது அவசியமில்லை) அது செல்லுபடியாகும்” என்று கூறினார்கள். (அல்முங்னீ:1/153)

இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

"ஒரு மனிதருடைய விரலில் மோதிரம் இருந்து, அதற்குக் கீழ் நீர் சென்றடையாவிட்டால் அதை அசைப்பதைக் கொண்டோ அல்லது அதைக் கழற்றுவதைக் கொண்டோ அதற்குக் கீழ் நீரை அடையச் செய்வது கடமையாகும் என்று எமது அறிஞர்கள் கூறியுள்ளார்கள்”. (அல்மஜ்மூஃ 1/394)

3. இஹ்ராம் அணிந்தவர் மோதிரம் அணியலாமா?

அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் இஹ்ராம் அணிந்தவர் கடிகாரம் அணியலாமா? என வினவப்பட்டது. அதற்கவர்கள்: "கடிகாரம் அணிவது மோதிரம் அணிவதைப் போன்றதே. இன்ஷா அல்லாஹ் அதில் எக்குற்றமும் இல்லை” என்று பதிலளித்தார்கள். (மஜ்மூஉ பதாவா வமகாலாத் முதனவ்விஆ: 17)

4. மோதிரத்தில் வைக்கப்படும் இரத்தினக்கல் மோதிரத்தின் வகையைச் சார்ந்ததாக இருப்பது அவசியமா?

பதில்: இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

"இரத்தினக்கல் மோதிரத்தின் வகையைச் சார்ந்ததாகவோ அல்லது, வேறொரு வகையாகவோ இருப்பது கூடும். என்றாலும், அது மோதிரத்திற்கு உடன்படக்கூடியதாக அமையப்பெற்றிருப்பது மிக ஏற்றமாகும். அதைப் பெரிதாக்குவது தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில், அது பெருமைக்குள் நுழைந்துவிடும். மேலும், அதில் பெண்களுக்கு ஒப்பான செயலும் காணப்படுகின்றது. ஏனென்றால், அவர்கள் வழமையில் இரத்தினக்கல்லை பெரிதாக்குவார்கள்”. (அஷ்ஷர்ஹுல் மும்திஃ)

5. ஒருவர் தனது மோதிரத்தில் அல்லாஹ் என்ற பெயரைப் பதிக்கலாமா?

பதில்: இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

"இது அவசியமற்றது. இப்படியான நிலைமைகளின் ஆகக் குறைந்த பட்ச சட்டம் வெறுக்கத்தக்கது என்பதேயாகும்.... இவை அனைத்தும் பித்அத்தான காரியங்களாகும். அல்லாஹ்வின் பெயரை இழிவுபடுத்தப்பட்டதாக ஆக்கிவிடுவதை இது அவசியப்படுத்தும். அதேபோன்று, இது போன்ற மோதிரத்தை இடது கையில் அணிந்திருப்பதால் ஒருவர் மலசல சுத்தத்தின்போது அழுக்குகளைத் தொடுவார். இது மிகவும் அபாயகரமான விடயமாகும்”. (அஷ்ஷர்ஹுல் மும்திஃ)

-    முற்றும்

-    அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்