பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் – 01

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா எமக்குத் தேர்ந்தெடுத்துத்தந்த இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு முஸ்லிமுடைய ஒழுக்க விடயங்கள், பண்பாடுகள், நடத்தைகள் குறித்து அதிகூடிய கவனம் செலுத்தக்கூடிய ஒரு மார்க்கமாக இருக்கின்றது. ஒரு முஸ்லிம் ஓர் இடத்திற்குச் சென்றால் அந்த இடத்தில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவ்வாறான நடத்தைகளில் ஈடுபடக்கூடாது என்பதற்க இஸ்லாம் பல வழிகாட்டல்களைக் கூறியிருக்கின்றது. அதன் பிரகாரம் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு இவ்வுலகிலேயே மிக விருப்பமான இடமாகிய பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல வழிகாட்டல்களை கற்றுத் தந்துள்ளார்கள். பள்ளிவாசலில் கடைபிடிக்கப்பட வேண்டிய சில ஒழுங்கு முறைகளை இங்கு நாம் குறிப்பிட்டிருக்கின்றோம்.

1.   பள்ளிவாசலுக்குள் நுழையும் போது வலது காலை எடுத்து வைத்து நுழைய வேண்டும்.

பள்ளிவாசலுக்குள் நுழையும் போது வலது காலை வைத்து நுழைவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும், ஸஹாபாக்களுடைய வழிமுறையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பொறுத்தவரையில் சிறப்பான காரியங்களில் ஈடுபடும் போது வலதையே முற்படுத்துவார்கள். பள்ளிவாசலுக்குள் நுழைவது சிறப்பான காரியம் என்ற அடிப்படையில் வலது காலை வைத்து நுழைவதை அறிஞர்கள் விரும்பத்தக்க ஒரு காரியமாகக் கருதியிருக்கின்றார்கள்.

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: 'நீ பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உனது வலது காலால் ஆரம்பிப்பதும், நீ வெளியேறினால் உனது இடது காலால் ஆரம்பிப்பதும் சுன்னாவைச் சேர்ந்த அம்சமாகும்.” இச்செய்தி ஹாகிம் என்ற கிரந்தத்தில் ஹஸன் என்ற தரத்தில் பதிவாகியிருக்கின்றது.

புஹாரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அவருடைய ஹதீஸ் கிரந்தத்தில் 'பள்ளிவாசலுக்குள் நுழையும்போதும் அதுவல்லாத காரியங்களிலும் வலதை முற்படுத்துதல்” என்று தலைப்பிட்டிருக்கின்றார்கள். பின்பு இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது தனது  வலது காலால் ஆரம்பிப்பார்கள், வெளியேறும் போது தனது இடது காலால் ஆரம்பிப்பார்கள் என்ற செய்தியை பதிய வைத்திருக்கின்றார்கள்.

எனவே, பள்ளிவாசலுக்குள் நுழையும் போது வலதை முற்படுத்துவதை ஸஹாபாக்கள் சிறப்பான ஒரு காரியமாகக் கண்டிருக்கின்றார்கள் என்பதை இச்செய்திகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம். நாமும் பள்ளிவாசலுக்குள் நுழையும்போது எமது வலது காலை எடுத்து வைத்து நுழையக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

2.   பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓத வேண்டிய துஆவை ஒத வேண்டும்.

பள்ளிவாசலுக்குள் நுழையும்போது ஓதுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரு துஆக்களைக் கற்றுத்தந்துள்ளார்கள்.

முதலாவது துஆ: اللهم افتح لي أبواب رحمتك

இந்த துஆ முஸ்லிம் என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

இரண்டாவது துஆ: أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم

இந்த துஆ அபூதாவுத் என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியை அவருடைய அஸ்ஸஹீஹுல் முஸ்னத் என்ற நூலில் ஹஸன் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இந்த துஆ குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வரும் சிறப்பம்சத்தைக் கூறியிருக்கின்றார்கள். 'யார் இந்த துஆவைக் கூறுகிறாரோ, அப்போது ஷைத்தான்: ‘அவர் ஏனைய நாட்களில் என்னிடமிருந்து பாதுகாக்கப்பட்டுவிட்டார்’ என்று கூறுவான்.”

ஆகவே, மிகச்சிறிய இந்த துஆக்களை நாம் மனனம் செய்து பள்ளிவாசலுக்குள் நுழையும்போது ஓதக்கூடியவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக இரண்டாவது துஆவை நாம் ஓதுபவர்களாக இருந்தால் ஷைத்தானிடமிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

3.   பள்ளிவாசலுக்குச் சென்று நாம் உட்கார விரும்பினால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்காரக்கூடாது.

இது விடயத்தில் நாம் அனைவரும் கவனம் செலுத்தாதவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்.” (புஹாரீ, முஸ்லிம்)

இந்த சுன்னாவை நாம் பள்ளிவாசலுக்குள் நுழைந்த பின் கடைபிடிப்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ஏவப்பட்ட ஒரு விடயம் என்பதை இந்த ஹதீஸின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

4.   பள்ளிவாசலில் நாம் உட்காரும்போது உட்கார்ந்து கொண்டிருக்கின்ற ஒருவரை எழுப்பிவிட்டு நாம் அவ்விடத்தில் உட்காரக்கூடாது.

பள்ளிவாசல் அல்லது, ஏனைய சபைகளில் இவ்வொழுங்கு முறையை நாம் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, ஜுமுஆத் தினத்தில் சிலர் சிலரை எழுப்பிவிட்டு அல்லது, முன்னால் நகர்த்திவிட்டு அல்லது, பின்னால் நகர்த்திவிட்டு அவ்விடத்தில் உட்கார்ந்து கொள்வதை நாம் கண்டிருக்கின்றோம். இவ்வாறான செயலை நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்கின்றார்கள். 'ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அவருடைய இடத்திலிருந்து எழுப்பிவிட்டு அவர் அந்த இடத்தில் உட்கார வேண்டாம்” என்று அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கக்கூடிய ஸஹாபி இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களிடம் நாபிஃ என்பவர் 'இது ஜும்ஆவிலா?” என்று வினவினார். அதற்கு இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் 'ஜும்ஆவிலும் ஜும்ஆ அல்லாத ஏனைய இடங்களிலும்” என்று பதிலளித்தார்கள். (புஹாரீ, முஸ்லிம்)

ஒருவர் தன்னுடைய ஒரு தேவைக்காக எழும்பிச் சென்றுவிட்டு மீண்டும் அவருடைய இடத்திற்கு வரும்போது அவருடைய இடத்தில் யாராவது உட்கார்ந்திருந்தால் அவரை எழுப்பிவிட முடியும் என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'யார் தன்னுடைய இடத்திலிருந்து எழும்பிச் சென்றுவிட்டு பின்பு மீண்டும் அவருடைய இடத்திற்கு வந்தால் அவ்விடத்திற்கு அவரே மிகத் தகுதியானவராவார்.”

இந்த ஹதீஸை ஆதராமாகக் கொண்டே அறிஞர்கள் தனது இடத்தில் உட்கார்ந்த ஒருவரை எழுப்பிவிட்டு அவ்விடத்தில் உட்கார முடியும் என்று கூறியிருக்கின்றார்கள். ஏனென்றால், அவ்விடம் அவருக்குச் சொந்தமானது என்பதை குறித்த ஹதீஸிலிருந்து விளங்க முடிகின்றது.

5.   பள்ளிவாசலில் காணாமல்போன பொருட்களைப்பற்றி விசாரிக்கக்கூடாது.

காணாமல்போன பொருட்களை பள்ளிவாசலில் விசாரித்துக் கொண்டிருப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள். 'யாராவது ஒருவர் காணமால்போன பொருளைப்பற்றி விசாரித்துக் கொண்டிருப்பதை செவிமடுக்கிறாரோ அவர் ‘அப்பொருளை உமக்கு அல்லாஹ் திருப்பித்தராமல் இருக்கட்டும்’ என்று கூறட்டும். ஏனென்றால், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

பள்ளிவாசலில் இவ்வாறான செயலில் ஈடுபடக்கூடாது என்பதை மேற்குறித்த ஹதீஸ் விளக்குகின்றது. யாராவது ஒருவர் இச்செயலில் ஈடுபட்டால் அவரைப் பார்த்து நாம்: 'அல்லாஹ் அப்பொருளை உமக்குத் திருப்பித்தராமல் இருக்கட்டும்” என்று கூற வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. பள்ளிவாசல்களைப் பொறுத்தவரையில் அவை அல்லாஹ்வை திக்ர் செய்வதற்கும், தொழுகை, குர்ஆன் ஓதுதல் ஆகிய செயல்களில் ஈடுபடுவதற்குமே கட்டப்பட்டுள்ளன. மாறாக, காணாமல்போன பொருளைப்பற்றி விசாரிப்பது பள்ளிவாசலுக்குரிய செயலல்ல என்பதையும் நாம் இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

காணாமல் போனவை எங்களுடைய பொருளாக இருந்தாலும் அல்லது, மிருகமாக இருந்தாலும் அல்லது, ஒரு மனிதராக இருந்தாலும் அவைபற்றி பள்ளிவாசலில் விசாரிக்கக்கூடாது என்பதை சஊதி அல்லஜ்னதுத் தாஇமாவைச் சேர்ந்த அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

மேலும், காணாமல்போன பொருளை அடையாளப்படுத்தி அது குறித்து மக்களுக்கு பள்ளிவாசலில் அறிவிப்பதையும் அறிஞர்கள் தடை செய்யப்பட்ட ஒன்றாகவே தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள். ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் காணாமல்போன பொருட்களை பிறருக்கு அறியப்படுத்துவதாக இருந்தால் பள்ளியின் வாசலிடத்தில் சென்று அறியப்படுத்தலாம் என்று கூறியிருக்கின்றார்கள்.

ஆகவே, காணமால்போன பொருட்களை பள்ளிவாசலில் விசாரிப்பதோ அதனைப் பிறருக்கு அறியப்படுத்த முற்படுவதோ கூடாத காரியம் என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்