அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை தொடர் – பகுதி 8

وَمِنَ الإيْمَانِ باللهِ : الإيْمانُ بِمَا وَصَفَ بِهِ نَفْسَهُ فِيْ كِتَابِهِ وَبِمَا وَصَفهُ بِهِ رَسُوْلُهُ مُحَمَّد صلى الله عليه وسلم

விளக்கம்:

அல்லாஹ் தொடர்பான வர்ணனை விடயத்தில் எமது நம்பிக்கை

மேற்கூறப்பட்ட வாசகத்தில் இருந்து அல்லாஹ் தொடர்பாக அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவில் இடம்பெற்றிருக்கக்கூடிய வர்ணனைகள் விடயத்தில் எமது நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், மேற்குறிப்பிடப்பட்ட வாசகமானது அல்லாஹ் தொடர்பான நம்பிக்கையின் ஒரு பகுதியாகும். அதாவது, அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதானது பிரதானமாக நான்கு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. அவையாவன,

1. அவனின் இருப்பை விசுவாசம் கொள்ளல்.

2. அவனை ருபூபிய்யாவைக் கொண்டு ஒருமைப்படுத்தல்.

3. அவனை உழூஹிய்யாவைக் கொண்டு ஒருமைப்படுத்தல்.

4. அவனை அவனது அல் அஸ்மாஉ வஸ்ஸிபாத்தைக் கொண்டு ஒருமைப்படுத்தல்.

எனவே மேற்குறிப்பிடப்பட்ட வாசகமானது, நான்காம் பிரிவின் ஒருபகுதியான அல்லாஹ்வின் ஸிபாத் (பண்புகள்) பற்றிய நம்பிக்கையைத் தெளிவுபடுத்துகின்றது. அதனால் தான் எமது விளக்கத்தின் துவக்கத்தில் “அல்லாஹ் தொடர்பான நம்பிக்கையின் ஒரு பகுதி” என்று குறிப்பிட்டிருந்தோம்.

(في كتابه) இங்கு كتابه என்ற வார்த்தையின் மூலம் அல்குர்ஆன் நாடப்படுகின்றது. மேலும், அல்லாஹுத்தஆலாவே அல்குர்ஆனுக்கு இப்பெயரைச் சூட்டியுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அது, லவ்ஹூல் மஹ்பூல் எனும் ஏட்டிலும், சங்கைமிக்க மலக்குகளின் கரங்களில் தவளக்கூடிய ஏடுகளிலும், எம்மத்தியில் காணப்படுகின்றன அல்குர்ஆன் பிரதிகளிலும் எழுதப்பட்டுள்ளது. எனவே, இங்கு كتاب (கிதாப்) என்ற பதத்தில் பயன்படுத்தப்பட்டாலும் مكتوب (எழுதப்பட்டது) என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், அல்லாஹுத்தஆலா இச்சொல்லை தன்னுடன் இணைத்துக் கூறியுள்ளான். அதற்குக் காரணம், அல்குர்ஆனானது அவனது வார்த்தையாக இருப்பதினாலாகும்.

மேற்கூறப்பட்டுள்ள அறபு வாசகத்தில் விரிவாக ஆராயத்தக்க பல பகுதிகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

1. அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதில், அவன் தன்னைப்பற்றி வர்ணித்த விடயங்களை விசுவாசம் கொள்வதும் உள்ளடங்கும். அதன் விளக்கமாவது,

நாம் முன்பு குறிப்பிட்ட பிரகாரம், அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதில் அவனது அல் அஸ்மாஉ வஸ்ஸிபாத்களை விசுவாசம் கொள்வதும் உள்ளடங்கியுள்ளது. ஏனெனில், அல்லாஹுத்தஆலா தன்னைப்பற்றிக் குறிப்பிடும் போது, தனக்குத் தனியான பெயர்களும் பண்புகளும் இருப்பதாகக் கூறியுள்ளான். அவற்றையே நாம் “அல் அஸ்மாஉ வஸ்ஸிபாத்” என்கிறோம்.

மேலும், இவ்விடயம் சாதாரணமாக அனைவரினாலும் ஏற்றுக் கொள்ள முடியுமான ஓர் உண்மையாகும். ஒருவன் எவ்விதப்பண்புகளும் இல்லாமல் இருக்கிறான் என்று கூறுவது சாத்தியமற்ற ஒன்றாகும். எந்த ஒன்றுக்கும் பண்புகள் அவசியம். அப்போது தான் அப்பொருள் இனம் காணப்படுகின்றது. இதனால் தான் அல்லாஹ் தொடர்பான நம்பிக்கையில் ஒரு பகுதியாக அவனது பண்புகளை விசுவாசம் கொள்வதும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, அவனது பண்புகளை முழுமையாக விசுவாம் கொள்ளாதவன் அல்லாஹ்வை முழுமையாக விசுவாசம் கொள்ளாதவனைப் போலாவான்.

2. அல்லாஹ்வின் பண்புகளானது மறைவான விடயங்களுடன் தொடர்புடையனவாகும். எனவே, மறைவான விடயங்களில் மனிதனின் நிலைப்பாடானது உள்ளதை உள்ளபடி நம்புவதாகும். அதைவிடுத்து மற்றொரு விளக்கத்தின் பால் செல்வது தடுக்கப்பட்ட காரியமாகும்.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹுத்தஆலா தன்னை எவ்வாறு வர்ணித்துள்ளானோ அல்லது அவனது தூதர் எவ்வாறு அவனைப்பற்றி வர்ணித்துள்ளாரோ அவ்வாறன்றி வேறு விதங்களில் அவனை வர்ணிக்க முடியாது” என்கிறார். (மஜ்மூஉல் பதாவா)

இக்கூற்றை உறுதி செய்யக்கூடிய பல ஆதாரங்களை அல்குர்ஆனில் இருந்து முன்வைக்கலாம். மேலும் புத்திரீதியான பல ஆதாரங்களும் கூட இதற்குள்ளன.

அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘என்னுடைய இரட்சகன் (ஆகாதென்று) தடுத்திருப்பதெல்லாம் மானக்கேடான செயல்களை அவற்றில் வெளிப்படையானதையும், மறைமுகமானதையும், (இதர) பாவத்தையும், உரிமையின்றி வரம்பு மீறுதலையும், அல்லாஹ்விற்கு நீங்கள் இணைவைப்பதையும் அதற்கு எந்தவித ஆதாரத்தையும் அவன் இறக்கிவைக்காதிருக்க, இன்னும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும் தான்’ என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல் அஃராஃப்: 33)

மேற்கூறப்பட்ட வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் ஒருவர் அல்லாஹ்வை அவன் வர்ணித்தற்கு மாற்றமாக வர்ணிக்க எத்தனிப்பது தனக்கு அறிவில்லா ஒன்றில் தலையை நுழைப்பதற்குச் சமனாகும். எனவே, இவ்வாறு நடந்து கொள்வது ஹராமாக்கப்பட்டுள்ளது என்பதை மேற்கூறப்பட்ட வசனத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

பிறிதோர் இடத்தில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கும் போது, ‘ (நபியே!) எதைப்பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர்! (ஏனெனில்) நிச்சயமாக, செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் – அதனைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.’ (பனீ இஸ்ராயீல்: 17)

இவ்வசனத்தில் கூட எவ்விடயத்தில் எமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அவ்விடயத்தில் நாம் ஈடுபடலாகாது என்ற பாடம் புகட்டப்பட்டுள்ளது. அதையும் மீறி எவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்களோ நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட ஒன்றில் ஈடுபட்டவர்களாகிவிடுவர்.

நாம் மேலே குறிப்பிட்ட பிரகாரம் அல்லாஹ்வுடைய பண்புகளானது மறைவான விடயங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும். அவற்றை புத்தியின் மூலம் அணுகமுடியாது. எனவே, அவனை அவன் வர்ணித்த வர்ணனைகள் மூலமன்றி எம் இஷ்டப்படி வர்ணிப்பதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். மேலும், அவன் எமக்கு இனங்காட்டித்தந்த வர்ணனைகளைக்கூட எம் கற்பனைக்குத்தக்கவிதத்தில் பயன்படுத்தி உருவமைத்துவிடவும் முடியாது. இந்த அடிப்படையை அல்லாஹ் விடயத்தில் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, சுவனத்து இன்பங்கள் தொடர்பான எத்தனையோ வர்ணனைகளை நாம் குர்ஆன் ஹதீஸ் மூலாதாரங்களில் இருந்து தெரிந்து வைத்துள்ளோம். ஆயினும் அவை முழுமையாக படைக்கப்பட்டிருந்தும் எங்களில் எவராலும் அதனுடைய உண்மையான அமைப்பை விளக்கிக் கொள்ள முடியாதுள்ளது. சான்றாக, சுவனவாசிகளுக்கு சித்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ள கனிகள் மற்றும் அக்கனிகளில் உள்ளடங்கக்கூடிய பேரீச்சம் பழம், மாதுளை போன்ற பல கனி வர்க்கங்களை எடுத்துக் கொள்வோம். அவை எமக்கு நன்கு அறிமுகமான கனிகளாக இருந்தாலும் அதன் எதார்த்த தன்மையை எங்களால் கூற முடியாது இருக்கின்றது. அதேநேரத்தில் அவ்வின்பங்கள் பற்றி சற்று வர்ணிக்குமாறு எம்மிடத்தில் வினவப்பட்டாலும் எங்களால் முழுமையாக அதன் இன்பங்களை வர்ணித்துக் கூற முடியாது. காரணம், அல்லாஹ் சுவனம் பற்றிக் குறிப்பிடும் போது, ‘ ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கனிகளின் குளிர்ச்சியை எந்த ஒர் ஆத்மாவும் அறியாது’ என்கிறான். (அஸ்ஸஜ்தா: 17)

மேலும், ஹதீஸூல் குத்ஸியில் அல்லாஹ் கூறும் போது, ‘நான் என்னுடைய ஸாலிஹான அடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திறாத, எந்தக் காதும் கேட்டிறாத, எந்த மனித உள்ளமும் கற்பனை செய்திறாத சுவனத்தை தயார் செய்து வைத்துள்ளேன்’ என்கிறான். எனவே, படைக்கப்பட்டு பண்புகளில் பல இனங்காட்டப்பட்ட ஒரு படைப்பையே எம்மால் புரிந்து கொள்ள முடியாதுள்ள நிலையில் எவ்வாறு படைப்பாளனான அல்லாஹ்வைப்பற்றி கற்பனை செய்ய முடியும் ?!!!

மேலும் புரிந்து கொள்வதற்காக பிறிதோர் உதாரணத்தை முன்வைக்கின்றேன். எம்முடன் இருக்கும் ரூஹைப்பற்றி உங்களில் எவரும் சிந்தித்ததுண்டா? அணு தினமும் அது எம்முடன் இருந்தும் அதனைப்பற்றி அறிவற்றவர்களாகவுள்ளோம். உண்மையில் அர்ரூஹானது கைப்பற்றப்படும் போது கண்களால் பார்க்கமுடியுமான ஒன்றாக இருந்தும் கூட எம்மால் அதனைப் பற்றி வர்ணிக்க முடியாதுள்ளது. காரணம் அதன் வர்ணனைகளில் அல்லாஹ் தெரியப்படுத்தியதைத் தவிர வேறு எதனையும் எம்மால் கூற முடியாததேயாகும். இவ்வாறிருக்க, எப்படி ஒருவர் அல்லாஹ்வின் பண்புகளைக் கண்டறிவதில் தன் சிந்தனையை முடுக்கிவிடுவதை காத்திரமான செயல் எனக்கூற முடியும்?!!!

எனவே, அல்லாஹ்வின் பண்புகளை உள்ளபடி நம்புவதே எமது கடமை. அதைவிடுத்து அவற்றை விளக்கிக்கூற எத்தனிப்பது தனது மடமையின் வெளிப்பாடே!!! அல்லாஹ் எம்மனைவரையும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைவிட்டும் பாதுகாப்பானாக.

1. அல்லாஹ் குறித்து குர்ஆன் ஹதீஸ் மூலாதாரங்களில் இடம்பெற்றுள்ளவற்றிற்கு வெளிப்படையான கருத்தை மாத்திரமே கொடுக்க வேண்டும். அவற்றில் எல்லை மீறிவிடக்கூடாது. உதாரணமாக, அல்லாஹ் தனக்கு கண் இருப்பதாக தன்னை வர்ணித்துள்ளான். அவ்வர்ணனையைக் கருத்திற் கொண்டு அதற்கு வியாக்கியானம் செய்யும் போது, கண் என்ற வாசகமானது எதார்த்தமாக கண்ணைக் குறிக்காது மாற்றமாக, அதன் மூலம் அவனது பார்வைதான் நாடப்படுகிறது என்று கூறலாகாது.

அதே போன்று அவனுக்கு இரு கைகள் இருப்பதாக அல்மாயிதா அத்தியாயத்தின் 64ம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அவ்வசனத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய இரு கைகள் என்ற வார்த்தையானது, அவனது எதார்த்தமான கைகளைக் குறிக்காது மாற்றமாக, தனது அடியார்களுக்கு அருள் புரியத்தக்க அருட்கொடைகளைத் தன்வசம் வைத்திருப்பதாகக் கூறுவதைக் குறிப்பிடுகிறது என்று விளக்கம் கூறக்கூடாது. எனவே, சிந்தித்துப்பாருங்கள்! அல்லாஹ்வை இவ்வாறெல்லாம் வர்ணிப்பது அவன் தன்னைப்பற்றி வர்ணித்த வர்ணனையைப்போலாகுமா ?!!!

2. பொதுவாக இமாமவர்கள் குறிப்பிட்ட, ‘அல்லாஹ்வின் பண்புகள்’ என்ற வாசகமானது அல்லாஹ் தன்னைப்பற்றி வர்ணித்த அனைத்து வகையான பண்புகளையும் உள்ளடக்கியிருக்கின்றது. ஏனெனில், அல்லாஹ்வின் பண்புகளைப் பிரதானமாக இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM