மீலாதுன் நபி கொண்டாட்டமும் அது குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடும் – 01

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா மனிதர்களை இவ்வுலகில் படைத்ததன் நோக்கம் அவனை வணங்குவதற்கேயாகும். அவன் அல்குர்ஆனிலே பின்வருமாறு கூறுகின்றான்: நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே அன்றிபடைக்கவில்லை.

-     அத்தாரியாத்: 56

ஆகவே, ஓர் அடியான் இபாதத்களைச் செய்வதன் மூலம் அல்லாஹ்வுடைய திருப்பொருத்தத்தை அவன் அடைந்து கொள்கின்றான்.

வணக்கம் என்பதை நாம் விரும்பியவாறு செய்ய முடியாது. மாறாக அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டித்தந்த பிரகாரமே நாம் செய்யும் வணக்க வழிபாடுகள் அமையப்பெற்றிருக்க வேண்டும்.

யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலைச் செய்கிறாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

-     புஹாரீ, முஸ்லிம்

ஆனால், இன்று அதிகமான மனிதர்கள் வணக்கம் என்ற பெயரில் அதிகமான பித்அத்களை உருவாக்கியுள்ளார்கள். அவற்றில் ஒன்றே அதிகமானவர்களால் கொண்டாடப்படக்கூடிய மீலாதுன் நபி கொண்டாட்டமாகும்.

ஆகவே, இந்தக் கொண்டாட்டம் குறித்து மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன? என்பதைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என ஆசைப்படுகின்றோம்.

1.    முஸ்லிம்களுக்கு மார்க்க அடிப்படையில் கொண்டாடுவதற்கு அனுமதிக்கப்பட்ட தினங்கள் எவை?

மார்க்க அடிப்படையில் முஸ்லிம்களுக்கு மூன்று பெருநாட்கள் மாத்திரமே காணப்படுகின்றன. நான்காவதாக ஒரு நாளைக் கொண்டாடுவதற்கு எவ்வித ஆதாரமும் காணப்படவில்லை.

முதலாவது நாள்: வெள்ளிக்கிழமை தினம்.

ஆதாரம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் கூறினார்கள்: நிச்சயமாக இது அல்லாஹ் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய ஒரு பெருநாள் தினமாகும். எனவே, யார் ஜும்ஆவுக்கு வருகின்றாரோ அவர் குளித்துக் கொள்ளட்டும்.

-     ஸஹீஹ் இப்னுமாஜா

இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்கள்: நோன்புப் பெருநாளும் ஹஜ்ஜுப் பெருநாளுமாகும்.

ஆதாரம்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்தார்கள். மக்களுக்கு விளையாடக்கூடிய இரண்டு நாட்கள் இருந்தன. அதற்கு அவர்கள் இந்த இரண்டு தினங்களும் என்ன? என்று வினவினார்கள். அதற்கு அம்மக்கள் ஜாஹிலிய்யாக் காலத்தில் நாம் இவ்விருதினங்களிலும் விளையாடக்கூடியவர்களாக இருந்தோம் எனக் கூறினார்கள். அதற்கு நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டு தினங்களுக்குப் பகரமாக இவ்விரண்டைவிடவும் சிறந்த வேறொன்றை உங்களுக்குப் பகரமாக்கியுள்ளான். அவைகள் தான் ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

- ஸஹீஹ் அபீதாவூத்

2.    பிறந்த நாள் கொண்டாடுவது குறித்து மார்க்கத் தீர்ப்பு என்ன?

எவருடைய பிறந்தநாளாக இருந்தாலும் அத்தினத்தைக் கொண்டாடுவது பித்அத்தாகும். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மேலும், இவ்வாறு பிறந்த நாள் கொண்டாடுவது யஹூதிகளுக்கும் நஸாராக்களுக்கும் ஒப்பான ஒரு செயலாகும். நபிமார்களுடைய பிறந்த நாளாக இருந்தாலும் அதனை எமக்கு கொண்டாட முடியாது. அது எமது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறந்த தினமாக இருந்தாலும் சரியே! யார் வணக்கம் என்ற அடிப்படையில் பிறந்த நாளைக் கொண்டாடுகிறாரோ அது பித்அத்தாகும். யார் நல்ல விடயம் எனக்கருதி இதனைக் கொண்டாடுகிறாரோ அது யஹூதிகளுக்கும் நஸாராக்களுக்கும் ஒப்பான ஒரு செயலாகும்.

3.    மீலாதுன் நபி கொண்டாட்டம் எப்பொழுது உருவாகியது?

முதலாவதாக இந்த பித்அத்தை உருவாக்கியவர்கள் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பாதிமிய்யூன்களாவார்கள். இவர்கள் அடிப்படையில் யஹூதிகளைச் சார்ந்தவர்களாவார்கள். இவர்களில் அல்முஇஸ் லிதீனில்லாஹ் அல்அபீதீ அல்மங்ரிபீ என்பவனே முதலாவதாக இதனை உருவாக்கினான். ஹிஜ்ரி 361ம் ஆண்டு ஷவ்வால் மாதம் மொரோக்கோவில் இருந்து இவன் எகிப்திற்கு புறப்பட்டான். ஹிஜ்ரி 362ம் ஆண்டு எகிப்தை வந்தடைந்த இவன் அங்கு இந்த பித்அத்தை உருவாக்கினான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்