பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் – 02

بسم الله الرحمن الرحيم

6. பள்ளிவாசலில் வியாபாரம் செய்யக்கூடாது.

பள்ளிவாசலில் வியாபாரம் செய்வதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள். "பள்ளிவாசலில் விற்பனை செய்யக்கூடிய ஒருவரை அல்லது வாங்கக்கூடிய ஒருவரை நீங்கள் கண்டால், ‘அல்லாஹ் உமது வியாபாரத்தில் இலாபமடையச் செய்யாமல் இருக்கட்டும்’ என்று நீங்கள் கூறுங்கள்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

இச்செய்தியை அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் ஸஹீஹ் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

பள்ளிவாசலில் வியாபாரம் செய்வதைத் தடை செய்யும் விதத்தில் இந்த ஹதீஸ் அமைந்திருக்கின்றது. பள்ளிவாசலில் வியாபாரம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் வெறுக்கத்தக்கது என்று ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். இது சரியான ஒரு கருத்தாகவும் காணப்படுகின்றது.

7. பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்தக்கூடாது.

பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்திப் பேசிக்கொள்வதும் தடை செய்யப்பட்ட ஒரு காரியமாகும். அஸ்ஸாஇப் இப்னு யஸீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: "நான் பள்ளிவாசலில் நின்றவனாக இருந்தேன், அப்போது என்னை நோக்கி ஒரு மனிதர் சிறிய கற்களை எறிந்தார். நான் திரும்பிப் பார்க்க அங்கே உமர் இப்னுல் ஹத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்தார்கள். ‘நீ சென்று அங்கிருக்கின்ற இருவரையும் என்னிடத்தில் அழைத்து வா’ என்று அவர்கள் கூறினார்கள். நான் அவ்விருவரையும் அவர்களிடத்தில் கூட்டிச் சென்றேன். ‘நீங்கள் இருவரும் யாவர்?’ அல்லது ‘நீங்கள் இருவரும் எங்கிருந்து வருகின்றீர்கள்?’ என்று உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களிடத்தில் கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும்: ‘நாம் தாஇபிலிருந்து வருகிறோம்’ எனக் கூறினார்கள். அப்போது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: ‘நீங்கள் இருவரும் இவ்வூரைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் உங்களிருவரையும் தண்டித்திருப்பேன். ஏனெனில், நீங்கள் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்திப் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள்!” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

பள்ளிவாசலில் சத்தங்களை உயர்த்திப் பேசுவது பாரிய குற்றம் என்பதும் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இச்செயலை கண்டித்துள்ளார்கள் என்பதும் மேற்குறித்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பள்ளிவாசலில் உயர்ந்த சத்தத்தில் கதைத்துக்கொண்டிருப்பதை நாம் கட்டாயம் தவிர்ந்துகொள்ள வேண்டும்.

அறிவு சார்ந்த விடயங்கள், பயான் நிகழ்ச்சிகள், குத்பா பிரசங்கங்கள், அவசியமான விடயங்கள் போன்றவற்றில் சத்தங்களை உயர்த்துவதில் தடையில்லை என்பதையும் இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் உட்பட பல அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். மாறாக, அவசியமற்ற வீணான பயனற்ற விடயங்களிலேயே சத்தங்களை உயர்த்திப் பேசக்கூடாது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

8. தொழுகையாளிகளுக்கும், பிற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் தொந்தரவாக அமையும் விதத்தில் அல்குர்ஆனை சத்தமிட்டு ஓதக்கூடாது.

மேற்குறிப்பிடப்பட்ட செயல் ஜுமுஆ நேரங்களில் அதிகமாகப் பள்ளிவாசல்களில் இடம்பெறக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு பள்ளிவாசலில் தொழக் கூடியவருக்கும், திக்ர் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும் தொந்தரவாக அமையும் விதத்தில் அல்குர்ஆனை ஓதுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருக்கின்றார்கள்.

அபூஸஈத் அல்ஹுத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாப் இருந்தார்கள். மனிதர்கள் குர்ஆனை சத்தமிட்டு ஓதுவதை அவர்கள் செவிமடுத்தார்கள். அவர்கள் தனது திறையை அகற்றி உங்களில் ஒவ்வொருவரும் தனது இறைவனுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றார். எனவே, உங்களில் சிலர் சிலரை நோவினைப்படுத்த வேண்டாம். உங்களில் சிலர் சிலரைவிட அல்குர்ஆனை சத்தமிட்டு ஓதவும் வேண்டாம்” என்று கூறினார்கள். (அபூதாவூத்) அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியை ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.

பிறருக்குத் தொந்தரவாக அமையாவிட்டால் குர்ஆனை சத்தமிட்டு ஓதுவதில் தவறில்லை என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக்கொள்ளலாம்.

9. அதான் கூறப்பட்ட பின்பு பள்ளிவாசலில் இருந்து அவசியத் தேவையின்றி வெளியேறக்கூடாது.

அதான் கூறப்பட்ட பின்பு பள்ளிவாசலில் இருந்து வெளியேறுவதும் தடுக்கப்பட்ட ஒரு காரியமாகும்.

அபுஷ்ஷஃஷாஃ என்பவர் கூறுகிறார்: "நாம் பள்ளிவாசலில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் அமர்ந்தவர்களாக இருந்தோம். அப்போது அதான் சொல்பவர் அதான் கூறினார். ஒரு மனிதர் பள்ளிவாசலில் இருந்து எழும்பி நடக்க ஆரம்பித்தார். அவர் வெளியேறிச் செல்லும் வரை அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்மனிதரை நோட்டமிட்டார். பின்பு ‘இம்மனிதர் அபுல்காசிம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்’ என்று அவர்கள் கூறினார்கள்.” (முஸ்லிம்)

அதான் கூறப்பட்ட பின்பு பள்ளிவாசலில் இருந்து வெளியேறுவதை ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறு செய்யும் செயலாகக் கண்டிருக்கின்றார்கள். அதன் காரணமாகவே இச்செயலில் ஈடுபடுவது தடை செய்யப்பட்ட ஒரு காரியம் என்று அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

ஒருவருடைய வுழூ நீங்கினால் அல்லது அவசியத் தேவையிருந்தால் அவர் வெளியேறிக் கொள்ள முடியும் என்றும் அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள்.

10. பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது இடது காலை வைத்து வெளியேற வேண்டும்.

இதற்குச் சான்றாக ஆரம்பமாகக் குறிப்பிடப்பட்ட அனஸ், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் செய்திகள் அமைந்திருக்கின்றன.

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: "நீ பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உனது வலது காலால் ஆரம்பிப்பதும், வெளியேறினால் உனது இடது காலால் ஆரம்பிப்பதும் சுன்னாவைச் சேர்ந்த அம்சங்களாகும்.” இச்செய்தி ஹாகிம் என்ற கிரந்தத்தில் ஹஸன் என்ற தரத்தில் பதிவாகியிருக்கின்றது.

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழையும்போது தனது  வலது காலால் ஆரம்பிப்பார்கள். வெளியேறும்போது தனது இடது காலால் ஆரம்பிப்பார்கள்.

பள்ளிவாசலுக்குள் நுழையும்போது வலது காலை வைத்து நுழைவது விரும்பத்தக்கது போன்று வெளியேறும்போது இடது காலை வைத்து வெளியேறுவதை அறிஞர்கள் விரும்பத்தக்கதாகக் கருதியிருக்கின்றார்கள்.

11. பள்ளிவாசலில் இருந்து வெளியேறும்போது கூறப்பட வேண்டிய துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்.

பள்ளிவாசலில் இருந்து வெளியேறும்போது ஓதுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் சிறிய ஒரு துஆவைக் கற்றுத்தந்துள்ளார்கள்.

اللهم إني أسألك من فضلك என்பதே அந்த துஆவாகும். இந்த துஆவையும் மனனம் செய்து நாம் பள்ளிவாசலில் இருந்து வெளியேறும்போது ஓதிக்கொள்ள வேண்டும்.

இங்கு பள்ளிவாசலில் நடந்துகொள்ள வேண்டிய சில ஒழுங்கு முறைகளை ஆதாரங்களுடன் இடம்பெறச் செய்திருக்கின்றோம். பள்ளிவாசலில் இவைகளைக் கடைபிடிப்பதும், இவைபற்றி அறியாத ஏனைய சகோதரர்களுக்கு இதனை எத்திவைப்பதும் நாம் செய்ய வேண்டிய கடமையாகும். நாம் பிற வீடுகளுக்குச் சென்றால் ஒழுக்கமாகவும் பண்பாடுடனும் நடந்து கொள்கின்றோம். அல்லாஹ்வின் வீடுகளாகிய பள்ளிவாசல்களுக்குச் சென்றால் அதைவிட அதிகமாகப் பண்பாடுகள், ஒழுக்க விழுமியங்கள், நடத்தைகள் குறித்து கவனமெடுப்பது எங்கள் அனைவரினதும் பொறுப்பாக இருந்து கொண்டிருக்கின்றது.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

-    தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்