இஸ்லாத்தின் பார்வையில் மோதிரம் – 05

بسم الله الرحمن الرحيم

செம்பு மோதிரம்

சில அறிஞர்கள் செம்பிலான மோதிரத்தை அணிவது கூடாது என்று கூறியுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செம்பிலான மோதிரத்தை அணிந்த ஒரு மனிதரைப் பார்த்து: "நான் உன்னிடம் சிலைகளுடைய வாடையைப் பெற்றுக்கொள்கின்றேன்” என்றார்கள். பின்பு அவர் இரும்பு மோதிரத்தை அணிந்து வந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "நான் உன்னிடம் நரகத்தின் ஓர் ஆடையைக் காண்கிறேன்” என்று கூறினார்கள். பின்பு அவர் அதை எறிந்துவிட்டார். (திர்மிதீ)

பேணுதல் என்ற அடிப்படையில் செம்பு மோதிரத்தைத் தவிர்ந்து கொள்வது மிகச் சிறந்தது. இதுவே அஷ்ஷெய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தெரிவு செய்த கருத்தாகும்.

நாம் முன்பு கூறியது போன்று வெள்ளி மோதிரத்தைத் தெரிவு செய்து அதை அணிந்து கொள்வதே மிகவும் சிறப்புக்குரியது. செம்பு மோதிரம் அணிவது பற்றி யஹ்யா அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்களிடம் வினவப்பட்டபோது: "அதைவிட வெள்ளி மோதிரத்தை அணிவதே மிகவும் ஏற்றமானதும் சிறப்பானதுமாகும்” என்று அவருடைய பத்வாவில் கூறியிருக்கிறார்.

ஏனைய கனிப்பொருட்களால் செய்யப்பட்ட மோதிரங்கள்

மேற்குறிப்பிடப்பட்ட நான்கு வகையையும் சாராத ஏனைய கனிப் பொருட்களால் செய்யப்பட்ட மோதிரங்களைப் பொறுத்தவரையில் அவைகளை அணிவது கூடும் என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகக் காணப்படுகின்றது.

இப்னு ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:  "வெள்ளி, முத்து, மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை அணிந்து கொள்வது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அனைத்து விடயங்களிலும் ஹலாலானது”. (அல்முஹல்லா: 10/86)

அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "தங்கமல்லாத வெள்ளியைச் சார்ந்த மோதிரம் அல்லது, அதுவல்லாத ஏனைய கனிப்பொருள் வகையிலிருந்து செய்யப்பட்ட மோதிரத்தைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கு அதை அணிந்து கொள்வது கூடுமாகும். அது பெறுமதிமிக்க கனிப்பொருள் வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் சரியே!” (அல்முன்தகா: 5/336)

முன்சென்ற தகவல்களின் சுருக்கம்:

தங்க மோதிரம்: ஆண்களுக்கு ஹராமானது, பெண்களுக்கு ஹலாலானது.

வெள்ளி மோதிரம்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஹலாலானது.

இரும்பு மோதிரம்: பேணுதல் என்ற அடிப்படையில் தவிர்ப்பது மிகச் சிறந்தது.

செம்பு மோதிரம்: பேணுதல் என்ற அடிப்படையில் தவிர்ப்பது மிகச் சிறந்தது.

மாணிக்கம், மரகதம், முத்து ஆகியவற்றால் செய்யப்பட்ட மோதிரம்: ஆண்கள் பெண்கள் ஆகிய இருபாலாருக்கும் ஆகுமானது.

குறிப்பு: மோதிரம் அணிகின்ற விடயத்தில் ஆண்கள் பெண்களுக்கான தனிப்பட்ட அலங்காரத்தை மேற்கொள்வதும், பெண்கள் ஆண்களுக்கான தனிப்பட்ட அலங்காரத்தை மேற்கொள்வதும் ஹராமானதாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களுக்கு ஒப்பாகக்கூடிய ஆண்களையும் ஆண்களுக்கு ஒப்பாகக்கூடிய பெண்களையும் சபித்தார்கள். (புஹாரி)

மோதிரம் அணிவதில் காபிர்களின் வழிமுறையைக் கையாள்வதும் ஹராமானதாகும். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகுகிறாரோ அவர் அக்கூட்டத்தைச் சார்தவராவார்”. (அபூதாவூத்)

அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அபூதாவூதில் இடம்பெறக்கூடிய ஹதீஸ்களை வேறு பிரிக்கும்போது இந்த ஹதீஸை ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

சந்தேகங்களும் தெளிவுகளும்

மோதிரங்கள் குறித்த சில சட்டங்களை நாம் இதுவரைக்கும் உங்களுக்குத் தெளிவுபடுத்தினோம். மேற்குறிப்பிடப்பட்ட தகவல்களில் உள்வாங்கப்படாத மோதிரம் குறித்த இன்னும் பல செய்திகள் காணப்படுகின்றன. அவற்றை கேள்வி பதிலாக இங்கு தொகுத்துத் தர இருக்கிறோம்.

1.   நிச்சயதார்த்த மோதிரம் - திருமணம் நிச்சயிக்கப்பட்டால் ஆண் பெண்ணுக்கும் பெண் ஆணுக்கும் அணியும் மோதிரம் - அணிவது கூடுமா?

பதில்: அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "மனிதர்களில் சிலர் திருமணம் செய்ய நாடினால் அல்லது, திருமணம் செய்தால் இதைத் தன் மனைவிக்கு அணிவிக்கின்றனர். இந்த வழமை இதற்கு முன்பு எங்களிடத்தில் அறியப்பட்டிருக்கவில்லை. அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இது கிறிஸ்தவர்களின் வழிமுறையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்கள். கிறிஸ்தவ மதகுருவிடம் கணவனும் மனைவியும் சென்று கிறிஸ்தவ ஆலயத்தில் கணவன் மனைவிக்கு சுண்டு விரலில் அல்லது, ஆழி விரலில் அல்லது, நடு விரலில் மோதிரத்தை அணிவிப்பார். இதன் சரியான முறையைப் பற்றி நானறியேன். என்றாலும், அஷ்ஷெய்ஹ் அல்பானி அவர்கள் இது கிறிஸ்தவர்களின் வழிமுறையிலிருந்து எடுக்கப்பட்ட ஒன்றாகும் என்று கூறியுள்ளார்கள்.

இதை விட்டுவிடுவது மிக ஏற்றம் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால், நாம் நாமல்லாத ஏனையவர்களுக்கு ஒப்பாகக்கூடாது. அத்தோடு இன்னொரு விடயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்! அது என்னவென்றால், சில மனிதர்கள் இதில் ஒரு நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள். கணவன் மனைவிக்குக் கொடுக்கும் மோதிரத்தில் தன் பெயரை பதிப்பார். மனைவி கணவனுக்குக் கொடுக்கும் மோதிரத்தில் தன் பெயரைப் பதிப்பார். மனைவியின் பெயர் பதிக்கப்பட்ட கணவனுடைய கையில் இருக்கும் மோதிரமும் கணவனின் பெயர் பதிக்கப்பட்ட மனைவியின் கையில் இருக்கும் மோதிரமும் அதே நிலையில் காணப்படும் காலமெல்லாம் அவர்களுக்கு மத்தியில் பிரிவு ஏற்படாது என்று நம்பிக்கை கொள்வார்கள். இது ஷிர்க்கின் வகையைச் சார்ந்ததாகும்.

கணவனை மனைவிக்கு விருப்பமானவராகவும், மனைவியை கணவனுக்கு விருப்பமனாவளாகவும் ஆக்கவிடும் என்று மனிதர்கள் கருதக்கூடிய தாயத்தை இது சார்கின்றது. இப்படியான நம்பிக்கை காணப்படுமாயின் அது ஹராமாகும். எனவே, நிச்சயதார்த்த மோதிரம் இரு விடயங்கள் சேர்ந்ததாக அமைகின்றது.

முதலாவது: அது கிறிஸ்தவர்களின் வழிமுறையிலிருந்து எடுக்கப்பட்டது.

இரண்டாவதாக: அந்த மோதிரம் தான் தனக்கும் தன் மனைவிக்கும் மத்தியில் இணைப்பை ஏற்படுத்தும் என்று கணவன் நம்பிக்கை கொண்டால் அது ஷிர்க்கின் வகையைச் சாரும்.

எனவே, அதை விடுவதையே மிகச் சிறந்ததாக நாம் காண்கிறோம்”. (மாதாந்த சந்திப்பு: 1/46)

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்.

-    தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்