அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை தொடர் – பகுதி 5

ஹவாரிஜ்கள்

அறிமுகம்:

‘நேர்வழி நடந்த கலீபாவான அலி (ரழி) அவர்களுக்கு எதிராகப் புரட்சிகளில் ஈடுபட்டோர் ஹவாரிஜ்கள் ஆவர்’. ஆயினும் அறிஞர்களின் கூற்றுக்களில் இருந்து, இஸ்லாமிய ஆட்சியாளருக்கு எதிராகப் புரட்சி செய்பவர்கள் அனைவரும் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உருவாக்கம்:

ஹவாரிஜ்கள் உருவான காலம் தொடர்பாகப் பல கருத்துக்கள் உள்ளன. அக்கருத்துக்களில் பிரதானமான கருத்தாக பின்வரும் கருத்து கருதப்படுகின்றது.

ஹிஜ்ரி 36 மற்றும் 37ல் நடைபெற்ற ஸிப்பீன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகப் போரில் ஈடுபட்ட இருதரப்பினரும் முடிவு செய்தனர். அதற்காக ஸஹாபாக்களான அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி), அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) ஆகியோரை நடுவர்களாக நியமித்தனர். கலீபா அலி (ரலி) அவர்களின் தரப்பிலிருந்த சிலர் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து அவருக்கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். தம் தரப்பிலுள்ள நியாயங்களைத் தெளிவுபடுத்துவதற்காக இவர்களுடன் கலீபா பல அமர்வுகளை நடத்தினார்கள். எனினும், கிளர்ச்சியாளர்கள் அலி (ரலி) அவர்களின் தரப்பிலிருந்த நியாயங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இதன் பின்னணியில் தான் கலீபா அலி (ரலி) அவர்களுக்கும் இக்கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் ஹிஜ்ரி 38ஆம் ஆண்டு ‘நஹ்ர்வான்’ என்ற இடத்தில் யுத்தம் மூண்டது.

பெயர்களும் பிரிவுகளும்:

இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் இவர்கள் ‘ஹரூரிய்யா’, ‘அஷ்ஷூராத்’, ‘அல்மாரிகா’, ‘அல் முஹக்கிமா’, ‘அந்நவாஸிப்’ போன்ற பல பெயர்களில் பிரபலமாகியுள்ளனர். மேலும், இவர்களுக்குள் பல உப பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகளில் ‘அல்முஹக்கிமா’, ‘அல்அஸாரிகா’, ‘அந்நஜ்தாத்’, ‘அஸ்ஸஆலிபா’, ‘அல்இபாழிய்யா’, ‘அஸ்ஸபரிய்யா’ ஆகிய பிரிவுகள் முன்னணியில் திகழ்கின்றன.

கொள்கை:

இவர்கள் கலீபாக்களான உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகியோரையும், ஜமல் யுத்தத்தில் கலந்துகொண்ட ஸஹாபாக்களையும், ஸிப்பீன் யுத்தத்தில் நடுவர்களாக நியமிக்கப்பட்ட இரு ஸஹாபாக்களையும் இறை நிராகரிப்பாளர்கள் என்று கூறுகின்றனர். இது மட்டுமின்றி, நடுவர்களாக நியமிக்கப்பட்ட இரு ஸஹாபாக்களையும் ஏற்றுக் கொண்ட ஏனைய ஸஹாபாக்களையும் இறை நிராகரிப்பாளர்கள் என்றும் கூறுகின்றனர். அத்துடன் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவதைத் தங்களது அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டுள்ளனர். மேலும், பெரும்பாவங்களில் ஈடுபடுவது இறைநிராகரிப்பை ஏற்படுத்தும் என்பதையும் தங்களது அடிப்படைக் கோட்பாடாகக் கருதுகின்றனர்.

மார்க்கத் தீர்ப்பு:

ஹவாரிஜ்கள் இறை விசுவாசிகளா? அல்லது இறை நிராகரிப்பாளர்களா? என்பது குறித்து இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஹவாரிஜ்கள் இறை நிராகரிப்பாளர்கள் அல்ல என்பதே பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தும், ஸஹாபாக்களின் ஏகோபித்த முடிவுமாகும். கலீபா அலி (ரலி) அவர்களோ ஏனைய நபித்தோழர்களோ ஹவாரிஜ்களை இறை நிராகரிப்பாளர்கள் என்று கூறவில்லை. இவர்கள் முஸ்லிம்கள் ஆனால், எல்லை மீறிய அநியாயக்காரர்கள் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள்.

குறிப்பு:

இத்துடன் பித்அத்வாதிகளின் பட்டியலில் இடம்பெறக்கூடிய சில குழுவினர் பற்றிய சுறுக்கமான தகவல் நிறைவு பெறுகின்றது. அவசியம் ஏற்படும் போது எனது விரிவுரையின் இடையில் இன்னும் பல விரிவான தகவல்களைத் தருகின்றேன். மேலும், பித்அத்வாதிகளில் உதாரணத்திற்காக எடுத்துக் கொண்டவர்களை மாத்திரமே இங்கு தெளிவுபடுத்தியுள்ளேன். அவர்களல்லாத இன்னும் பலர் உள்ளனர். அவர்களின் பெயர்கள் இடம்பெறும் போது அது குறித்த தகவல்களையும் உங்கள் பார்வைக்குத் தருகின்றேன். இன்ஷா அல்லாஹ்.

أهل السنة والجماعة. وهو الإيمان بالله وملائكته وكتبه

விளக்கம்:

(الجماعة)

இப்பதத்தின் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு மனித கூட்டம் நாடப்படுகின்றது. அக்கூட்டமானது, அல்குர்ஆன் அஸ்ஸூன்னாவில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், உண்மையில் ஒன்றிணைந்ததாகவும் காணப்படும். அவர்கள் ஸஹாபாக்களாகவும், அவர்களை கியாமத் நாள் வரை நல்லமுறையில் பின்பற்றி வருபவர்களாகவும் இருப்பர். மேலும், அத்தகையவர்கள் சொற்ப தொகையினராக இருந்தாலும் சரியே! இதனைப் பின்வரும் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களின் கூற்று தெளிவுபடுத்துகின்றது. ‘ஜமாஆத்தானது, எப்போதும் உண்மைக்கு உடன்பட்டதாக இருக்கும். அவ்வாறு உண்மைக்கு உடன்பட்டவர்களில் நீ மட்டும் இருந்தாலும், (அப்போது) நீயும் ஒரு ஜமாஅத்தாகவே கருதப்படுவாய்’.

(هو)

இப்பிரதிச் சொலின் மூலம் ‘வெற்றி பெறக்கூடிய கூட்டத்தின் அகீதா’ நாடப்படுகின்றது.

(الإيمان)

‘ஈமான்’ என்ற வார்த்தைக்கு அறபு மொழிக்கருத்தின் அடிப்படையில் ‘உண்மைப்படுத்தல்’ என்று பொருள் கொள்ளப்படும். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டே பின்வரும் திருக்குர்ஆன் வசனமும் அமைந்துள்ளது.

‘நாம் உண்மையாளர்களாக இருந்தாலும் நீங்கள் எம்மை நம்புவோராக இல்லை’ (யூஸூப்:17) மேலும், மார்க்க அடிப்படையில் ‘ஈமான்’ என்பது, ‘(குறித்த ஓரு விடயத்தை) நாவால் மொழிவதும், மனதால் உறுதிப்படுத்துவதும், உருப்புக்களால் செயலுருப்படுத்துவதுமாகும்’.

(الإيمان بالله)

அல்லாஹ்வை ஈமான் கொள்வதில் பின்வரும் அம்சங்கள் உள்ளடங்குகின்றன.

  • அவனே அனைத்து வஸ்த்துக்களையும் படைத்துப் பரிபாலிப்பவன் என நம்புதல்.
  • அவனுக்கு பூரண பண்புகள் உள்ளன என நம்புதல்.
  • அவன் அனைத்து விதமான குற்றம் குறைகளுக்கும் அப்பாற்பட்டவன் என நம்புதல்.
  • அவன் மாத்திரமே வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் என நம்புதல்.

மேற்கூறப்பட்ட அடிப்படைகளை முறையாக அறிந்திருப்பதும், செயலுருப்படுத்துவதும் அல்லாஹ் பற்றிய நம்பிக்கையைப் பூரணப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

(وملائكته)

மலக்குகளைக் கொண்டு ஈமான் கொள்வதாகிறது, பின்வரக்கூடிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

  • மலக்குகள் என்ற ஒரு படைப்பு இருப்பதாக எற்றுக் கொள்ள வேண்டும்.
  • அல்லாஹூத்தஆலா, அல்குர்ஆனில் வர்ணித்துக் கூறியுள்ள பிரகாரம் அவர்களுக்கென்று தனியான பல பண்புகள் உள்ளன என நம்ப வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் கவனிக்க.. ‘(அவர்கள் அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள், சொல்லைக் கொண்டு அவனை அவர்கள் முந்தமாட்டார்கள், அவர்களோ அவனின் கட்டளையைக் கொண்டு செயல்படுவார்கள்.’ (அல் அன்பியா: 26,27)
  • அல்குர்ஆனும் அஸ்ஸூன்னாவும் மலக்குகளின் பிரிவினர் தொடர்பாகவும் அவர்களின் பண்புகள் தொடர்பாகவும் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகள் தொடர்பாகவும் சிலாகித்துப் பேசியுள்ளன. அவை அனைத்தையும் உள்ளபடி ஏற்றுக் கொள்வது எமது கடமையாகும்.

(وكتبه)

வேதங்களைக் கொண்டு ஈமான் கொள்வதாகிறது பின்வரக்கூடிய விடயங்களைப் பொதிந்ததாக இருக்கும்.

  • அல்லாஹ் தன் தூதர்களுக்கு இறக்கிவைத்த வேதங்களை உண்மைப்படுத்தல்.
  • அவ்வேதங்கள் அனைத்தும் அவனது பேச்சி என்று நம்புதல்.
  • அவ்வேதங்களில் இடம்பெற்றுள்ள அனைத்தும் உண்மையானதும், ஒளிமயமானதும், நேர்வழி காட்டக்கூடியதுமாக இருக்கும் என நம்புதல்.
  • அல்லாஹூத்தஆலா பெயர் குறிப்பிட்ட வேதங்களான தவ்ராத், இன்ஜீல், ஸபூர், குர்ஆன் ஆகியவற்றையும் பெயர் குறிப்பிடாத வேதங்களையும் நம்புதல்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM