அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை தொடர் – பகுதி 19

وقوله : بسم الله الرحمن الرحيم ربنا وسعت كل شيء رحمة وعلما وكان بالمؤمنين رحيما ورحمتي وسعت كل شيء كتب ربكم على نفسه الرحمة وهو الغفور الرحيم فالله خير حافظا وهو أرحم الراحمين

விளக்கம்:

அருள் புரிதல் மற்றும் பாவமன்னிப்பு வழங்கல் ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹுத்தஆலா வர்ணிக்கப்படுவதை உறுதி செய்யும் சான்றுகள்.

அருள் புரிதல் மற்றும் பாவமன்னிப்பு வழங்கல் ஆகியன அல்லாஹ்வின் பண்புகளில் உள்ளன என்பதை உறுதி செய்யும் சான்றுகளாகப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை இமாமவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கின்றேன்.)

மேலும், எங்கள் இரட்சகனே! நீ யாவற்றையும், அருளாலும், அறிவாலும் சூழ்ந்திருக்கின்றாய்.' (காபிர்: 7)

அவன் நம்பிக்கையாளர்களுடன் நிகரற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.' (அல்அஹ்ஜாப்: 43)

இன்னும், எனது அருளோ யாவற்றையும் வியாபித்துள்ளது.' (அல்அஃராப்: 156)

உங்களது இரட்சகன் கருணை காட்டுவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான்.' (அல்அன்ஆம்: 54)

அவன் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான்.' (யூனுஸ்: 107)

அல்லாஹ்வே சிறந்த பாதுகாவலன். அவனே கருணையாளர்களில் எல்லாம் மிகப் பெரிய கருணையாளன் என்று (யஃகூப்) கூறினார்.' (யூசுப்: 64)

மேற்குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனங்களில் அருள் புரிதல், மன்னிப்பு வழங்கல் ஆகிய பண்புகளைக் கொண்டு அல்லாஹுத்தஆலா வர்ணிக்கப்பட்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள். எப்படி ஏனைய பண்புகளை அவனது அந்தஸ்திக்குத் தக்கவிதத்தில் ஏற்றிருக்கின்றோமோ அவ்வாறே இப்பண்புகளையும் ஏற்றுக் கொள்ளவது எமது கடமையாகும்.

மேலும், இவ்வசனங்களில் இஸ்லாத்தில் தோற்றம் பெற்ற வழிகொட்ட பிரிவினர்களான அல்ஜஹ்மிய்யா, அல்முஃதஸிலா போன்றோருக்கும் சிறந்த மறுப்புள்ளது. அவர்கள் தங்களது வழி கெட்ட சிந்தனையை அல்லாஹ்வுக்கு ஒப்புவமையாக்கமாட்டோம் என்ற தோரணையில் வகுத்துள்ளார்கள். ஆயினும், இச்சிந்தனை தவறானது. அல்லாஹுத்தஆலா தன்னைப் பல பண்புகளைக் கொண்டு வர்ணித்துள்ளான். அவற்றை படைப்பினங்களின் பண்புகளைக் கொண்டு ஒப்பிடுவது முறையற்ற செயலாகும். ஏனெனில், அல்லாஹ்வுக்கு ஒப்பாக எதுவுமில்லை என்பது அல்குர்ஆன் எமக்கு இயம்பும் தராக மந்திரமாகும். இப்படியிருக்க ஓர் அடியான் அகிலத்தாரின் இரட்சகனை பலவீனத்திலும் மிக பலவீனத்தில் உள்ள மனிதனுடன் எப்படி ஒப்பிடுவான்? பண்புகள் ஒரே வகையில் இருப்பதை வைத்து அப்பண்புகளுக்குச் சொந்தக்காரர்களாக விளங்குபவர்கள் ஒரே நபர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எப்படி படைப்பினங்களுக்கு அவைகளின் அந்தஸ்திக்குத் தக்க விதத்தில் பண்புகள் காணப்படுகின்றனவோ, அதேவகையான பண்புகள் படைப்பாளனின் அந்தஸ்திக்குத் தக்கவிதத்தில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. அல்லாஹ் மிக அறிந்தவன்.

وقوله : رضي الله عنهم ورضوا عنه وقوله : ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وقوله : ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه وقوله : فلما ءاسفونا انتقمنا منهم وقوله : ولكن كره الله انبعاثهم فثبطهم وقوله : كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون

விளக்கம்:

அல்லாஹ்வின் திருப்பொருத்தம், கோபம், வெறுப்பு பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதும் அவற்றைக் கொண்டு அவன் வர்ணிக்கப்பட்டுள்ளான் என்பதும் தொடர்பான பாடம்.

மேற்குறித்த தலைப்பின் கீழ் இடம்பெறக்கூடிய சில அல்குர்ஆன் வசனங்களை இமாமவர்கள் தெரிவு செய்துள்ளார்கள். அவற்றின் தமிழ்வடிவம் பின்வருமாறு,

அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். ( அல்மாயிதா: 119)

நம்பிக்கையாளரான ஒருவரை யார் வேண்டுமென்றே கொலை செய்கின்றானோ அவனுக்குரிய கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டு அவனைச் சபித்தும்விட்டான். (அந்நிஸா: 93)

நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டக்கூடியதைப் பின்பற்றியதும், அவனது பொருத்தத்தை வெறுத்ததுமே இதற்குக் காரணமாகும். (முஹம்மத்: 28)

மேலும், அவர்கள் நம்மைக் கோபப்படுத்திய போது, நாம் அவர்களைப் தண்டித்து... (அஸ்ஸுஹ்ருப்: 55)

எனினும் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்களைத் தடுத்துவிட்டான். (அத்தவ்பா: 46)

நீங்கள் செய்யாதவற்றைக் கூறுவது அல்லாஹ்விடம் கோபத்தல் பெரிதாகிவிட்டது. (அஸ்ஸப்: 3)

மேற்கூறப்பட்ட வசனங்களில் அல்லாஹ்வின் பண்புகளாக, கோபம் கொள்ளல், பொருந்திக்கொள்ளல், சபித்தல், வெறுத்தல், தண்டித்தல் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. இவையனைத்தும் அல்லாஹ்வின் செயல்சார் பண்புகளாகும். இவற்றை அவன் நாடிய வேளையில் நாடிய வித்தில் பிரயோகிக்கின்றான். அஹ்லுஸ் ஸுன்னத்தைச் சேர்ந்தோர் இவை அனைத்தையும் அவனது அந்தஸ்திக்குத் தக்கவிதத்தில் உறுதிப்படுத்தக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM IBNU MUHAMMAD TOUFEEK