அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை தொடர் – பகுதி 11

بل يؤمنون بالله سبحانه ليس كمثله شيء وهو السميع البصير , فلا ينفون عنه ما وصف به نفسه ولا يحرفون الكلم عن مواضعه

விளக்கம்:

அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு:

இமாமவர்கள், அல்லாஹ்வின் பண்புகளை விசுவாசம் கொள்வதின் அவசியத்தைத் தெளிவுபடுத்தியதன் பிற்பாடு அவைகள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அதனடிப்படையில், அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஆத்தினரைப் பொறுத்தளவில், அவர்கள் ‘அல்லாஹ்வைப் போன்று எப்பொருளும் இல்லை’ என்ற அடிப்படையை வைத்துக் கொண்டு படைப்பினங்களின் பண்புகளுக்கு அவனை ஒப்பாக்குவதைவிட்டும் தூரமாவதற்காக முஅத்திலாக்கள் அவனது பண்புகளை மறுத்ததைப் போன்று மறுக்கமாட்டார்கள். மாற்றமாக, அவர்கள் எப்படி படைப்பினங்களுக்கு தனிப்பட்ட பண்புகள் உள்ளனவோ அதே போன்று அல்லாஹ்வுக்கும் அவனது அந்தஸ்திக்குத் தக்கவிதத்தில் தனிப்பட்ட பண்புகள் உள்ளன எனக் கூறுகின்றனர். மற்றும், அவற்றுக்கிடையே எவ்வித ஒப்பீடுகளும் இருக்காது எனவும் இயம்புகின்றனர்.

மேலும், அவர்கள் முஅத்திலாக்களைப் போன்று அல்குர்ஆனின் வசனங்களை மாற்றக்கூடியவர்களாகவோ அவற்றின் கருத்துக்களில் மாற்று விளக்கம் சொல்லக்கூடியவர்களாகவோ இருக்கமாட்டார்கள்.

ولا يلحدون في أسماء الله وآياته , ولا يكيفون ولا يمثلون صفاته بصفات خلقه

விளக்கம்:

அல்லாஹ்வின் பண்புகள் மற்றும் அவனது வசனங்கள் விடயத்தில் இல்ஹாத்:

அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் அடுத்த நிலைப்பாடு, அவர்கள் அவற்றில் ‘இல்ஹாத்’ எனும் செயலை மேற்கொள்ளக்கூடியவர்களாக இருக்கமாட்டார்கள்.

இல்ஹாத் என்றால் என்ன?

இல்ஹாத் எனும் அறபு வாசகத்திற்கு அறபு மொழிக் கருத்தின் அடிப்படையில் ‘ஒரு விடயத்தைவிட்டும் சாய்ந்து செல்லல்’ எனப் பொருள் கொள்ளப்படும். இங்கு அல்லாஹ்வின் பண்புகள் மற்றும் அவனது வசனங்கள் ஆகியவற்றில் இல்ஹாத் செயல்முறை என்பதின் மூலம் நாடப்படுவது, ‘அவற்றினது எதார்த்த கருத்தை விடுத்து தவறான கருத்தின் பால் சாய்ந்து செல்லலாகும்’.

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளில் இல்ஹாத்

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் மேற்கொள்ளப்படும் இல்ஹாத் செயல்முறையை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளை சிலைகளுக்குப் பெயராகச் சூட்டுதல்

இச்செயல்முறையின் வெளிப்பாடாகவே அறியாமைக்கால மக்கள் தங்களது சிலைகளுக்குப் பெயர் சூட்டி வந்தனர். அதன்படி ‘இலாஹ்’ என்ற வார்த்தையில் இருந்து ‘லாத்’ என்ற பெயர் பிறந்ததாகவும், ‘அஸீஸ்’ என்ற வார்த்தையில் இருந்து ‘உஸ்ஸா’ என்ற பெயர் பிறந்ததாகவும், ‘மன்னான்’ என்ற வார்த்தையில் இருந்து ‘மனாத்’ என்ற பெயர் பிறந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

2. அல்லாஹ்வுக்கு பொருத்தமற்ற பெயர்களைச் சூட்டி அழைத்தல்

இதற்கு உதாரணமாக, கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வை ‘பிதா’ (தந்தை) என்று அழைப்பதையும், தத்துவவியலாளர்கள் அல்லாஹ்வை ‘மூலகாரணி’ என்று அழைப்பதையும் குறிப்பிடலாம்.

3. அல்லாஹ்வின் அந்தஸ்திற்குப் பங்கம் விளைவிக்கும் விதத்தில் அவனை வர்ணித்தல்

இதற்குச் சான்றாக யூதர்கள் அல்லாஹ்வை ஏழை என்றும், அவனது கைகள் கட்டப்பட்டுள்ளன என்றும், அவன் சனிக்கிழமைகளில் ஓய்வு எடுக்கின்றான் என்றும் வர்ணித்தவற்றைக் குறிப்பிடலாம்.

4. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளின் கருத்துக்களையும் அதன் எதார்த்த தன்மைகளையும் மறுத்தல்

இல்ஹாதின் இப்பிரிவுக்கு ஜஹ்மிய்யாக்களின் செயற்பாடுகளைச் சான்றாக முன்வைக்கலாம். அவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் குறித்துக் குறிப்பிடுகையில், ‘நிச்சயமாக அவை எவ்வித பண்புகளையும், கருத்துக்களையும் உள்ளடக்காத வெற்று வார்த்தைகளாகும்’ என்கின்றனர். மேலும், கூறுகையில்: ‘ஸமீஉ’ என்ற வார்த்தை செவியேற்றலைக் குறிப்பிடாது என்றும், ‘பஸீர்’ என்ற வார்த்தை பார்த்தலைக் குறிப்பிடாது என்றும், ‘ஹய்யு’ என்ற வார்த்தை உயிருடன் இருத்தலைக் குறிப்பிடாது என்றும் கூறுகின்றனர்.

5. அல்லாஹ்வின் பண்புகளைப் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பிடுதல்

இதற்கு உதாரணமாக அல்லாஹ்வின் பண்புகளில் ‘அத்தம்ஸீல்’ எனும் செயற்பாட்டை மேற்கொள்ளக்கூடியவர்களின் கருத்துக்களைக் குறிப்பிடலாம். அவர்கள் அல்லாஹ்வின் கையைப் பற்றிக் கூறும் போது, அவனது கை எமது கையைப்போன்றது என்கின்றனர். அல்லாஹுத்தஆலா தன்னுடைய பெயர்களிலும் அவனது பண்புகளிலும் இத்தகைய இல்ஹாத் நடவடிக்கையை மேற்கொள்வோரைக் கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரித்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்:

‘அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனைப் பிரார்த்தியுங்கள். அவனது பெயர்களில் திரிபுபடுத்துவோரை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காக அவர்கள் கூலி வழங்கப்படுவார்கள்.’ (அல் அஃராப்: 180)

மேலும் கூறுகையில்:

‘நிச்சயமாக எவர்கள் நமது வசனங்களைத் திரிபுபடுத்துகின்றார்களோ அவர்கள் நம்மிடமிருந்து மறைந்து விட மாட்டார்கள். மறுமை நாளில் நரகத்தில்;; எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது அச்சமற்றவராக வருபவரா? நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றைப் பார்ப்பவன்.’ (புஸ்ஸிலத்: 30)

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU HUNAIF MUHAMMAD HISHAM