அல்அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை – 26

بسم الله الرحمن الرحيم

விட்டுக் கொடுப்பு, மிக்க மன்னிப்பு, கிருபை, கண்ணியம், சக்தி ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹுத்தஆலா வர்ணிக்கப்படுகிறான் என்பதற்கான சான்றுகள்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “(செய்யும்) நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது, அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது, (ஒருவர் உங்களுக்குச் செய்த) யாதொரு தீங்கை நீங்கள் மன்னித்துவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ், (குற்றங்களை) மிக்க மன்னிப்போனாக, (தண்டிக்க) பேராற்றலுடையோனாக இருக்கின்றான்”. (அந்நிஸா: 149)

மேலும் கூறுகின்றான்: “அவர்களை மன்னித்துவிடவும், (பழைய வருத்தத்தைப்) பொருட்படுத்தாது விட்டுவிடவும் அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்”. (அந்நூர்: 22)

இன்னும் கூறுகின்றான்: “(நபியே நீர் கூறுவீராக) கண்ணியம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசிகளுக்கும் உரியதாகும்”. (அல்முனாபிகூன்: 08)

மேலும் கூறுகின்றான்: “(அப்போது) அவன், 'உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் அனைவரையும் வழிகெடுத்துவிடுவேன்' என்றான்”. (ஸாத்: 82)

மேற்குறித்த வசனங்களில் அல்லாஹுத்தஆலா விட்டுக்கொடுப்பு, மிக்க மன்னிப்பு, சக்தி, கிருபை மற்றும் கண்ணியம் ஆகியவற்றைக் கொண்டு வர்ணிக்கப்பட்டுள்ளான் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இத்தகைய பண்புகள் அனைத்தும் அவனின் அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் காணப்படுகின்றன என்று நாம் கூற வேண்டும்.

அல்லாஹ்வுக்கு அவனின் பெயர்களை உறுதிப்படுத்துதலும், அவனுக்கு உதாரணம் கூறாமல் இருத்தலும்.

மேற்குறித்த தலைப்பு தொடர்பான சில அல்குர்ஆன் வசனங்களை இமாவர்கள் இடம்பெறச் செய்துள்ளார்கள். அவற்றுக்கான தமிழ் வடிவமானது:

அல்லாஹ் கூறுகின்றான்: “(நபியே!) மிக்க கீர்த்தியும், கண்ணியமும் உடைய உமது இரட்சகனின் பெயர் மிக்க பாக்கியமுடையது”. (அர்ரஹ்மான்: 78)

மேலும் கூறுகின்றான்: “ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?”  (மர்யம்: 65)

இன்னும் கூறுகின்றான்: “அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை”. (அல்இஹ்லாஸ்: 04)

மற்றும் கூறுகின்றான்: “(இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்”. (பகரா: 22)

மேலும் கூறுகின்றான்: “அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்”. (பகரா: 165)

இவ்வசனங்களை நன்கு நோட்டமிடுகையில் இவற்றில் அல்லாஹ்வினுடைய பெயர்கள் உறுதிப்படுத்தப்பட்டு மேன்மைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அவற்றில் அவனுக்கு எவ்வித ஒப்புவமையும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படியாக அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது என்று மறுக்கப்பட்டவைகள் சுருக்கமான அமைப்பில் காணப்படுவதே அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவுடைய போக்காகும். இப்போக்கு அவனின் கட்டாயமான பூரணத்துவத்திற்கு எதிராகக் காணப்படக்கூடிய எல்லா வகையான குறைகளையும் மறுப்பதாக அமைகின்றது.

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்

-    தொகுப்பு: அபூஹுனைப்