அல்அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை – 24

بسم الله الرحمن الرحيم

وقوله: (قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير) سورة المجادلة : 1

 وقوله: (لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء) سورة آل عمران: 181

وقوله : (أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون) سورة الزخرف: 80

وقوله تعالى: (إنني معكما أسمع وأرى) سورة طه : 46

وقوله تعالى : (ألم يعلم بأن الله يرى) سورة العلق: 14

 وقوله تعالى : (الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم) سورة الشعراء: 218-220

 وقوله تعالى: (وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون) سورة التوبة: 105

விளக்கம்:

அல்லாஹுத்தஆலாவின் செவிப்புலன் மற்றும் பார்வைப்புலன் ஆகியவற்றை உறுதிசெய்யும் சான்றுகள்

அல்லாஹ் கூறுகின்றான்: "(நபியே!) தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, (அதைப் பற்றி) அல்லாஹ்விடம் முறையிட்டாளே அத்தகையவளுடைய கூற்றை - முறையீட்டை - த் திட்டமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான், அல்லாஹ் உங்களிருவரின் (வாக்கு)வாதத்தையும் செவியேற்றான், நிச்சயமாக அல்லாஹ் மிக செவியேற்கிறவன், (அனைத்தையும்) பார்க்கிறவன்.” (முஜாதிலா: 1)

மேலும் கூறுகின்றான்: "நிச்சயமாக அல்லாஹ் ஏழை, நாங்கள்தான் சீமான்கள் என்று கூறினார்களே அத்தகையவர்களுடைய சொல்லைத் திட்டமாக அல்லாஹ் செவியேற்றுவிட்டான்.” (ஆலு இம்றான்: 181)

இன்னும் கூறுகின்றான்: "அல்லது அவர்களின் இரகசியத்தையும் அவர்களின் இரகசிய ஆலோசனையையும் நிச்சயமாக நாம் செவியேற்பதில்லை என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அல்ல. அவர்களிடத்திலிருக்கும் (மலக்குகளாகிய) நம்முடைய தூதர்கள் எழுதிக் கொள்கிறார்கள்.” (அஸ்ஸுஃரூப்: 80)

மற்றும் கூறுகிறான்: "நிச்சயமாக நான் உங்களிருவருடன் (யாவையும்) கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருப்பேன் என (அல்லாஹ்வாகிய அவன் கூறினான்.)” (தாஹா: 46)

மேலும் கூறுகிறான்: "நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கின்றான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?” (அல்அலக்: 14)

இன்னும் கூறுகிறான்: "அவன் எத்தகையவனென்றால் நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும் சமயத்தில் அவன் உம்மைப் பார்க்கிறான். சிரம்பணிவோரில் (ருகூவு, ஸுஜூது செய்வது கொண்டு நீர் இருக்கின்ற போது) உம்முடைய இயங்குதலையும் (அவன் பார்க்கிறான்.) நிச்சயமாக அவனே செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.” (அல்ஷுஅரா: 218-220)

மற்றும் கூறுகிறான்: "மேலும், (நபியே) நீர் கூறுவீராக: நீங்கள் செய்பவற்றை செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விசுவாசிகளும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள்.” (அத்தவ்பா: 105)

ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: "மேற்குறிப்பிடப்பட்ட வசனங்களை அவதானிக்கையில் அவ்வசனங்களில் செவிப்புலனைக் கொண்டும் கற்புலனைக் கொண்டும் அல்லாஹுத்தஆலா வர்ணிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். அவன் தனது அந்தஸ்துக்குத் தக்க விதத்தில் செவியேற்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். மேலும், அவன் படைப்பினங்களிடத்தில் காணப்படக்கூடிய அனைத்துவகையான பண்புகளைவிட்டும் தூய்மையானவனாகவும் அவற்றுக்கு ஒப்பற்றவனாகவும் இருக்கின்றான்.

எனவே, இந்த வசனங்கள் அல்லாஹ்வுக்கு செவிப்புலனையும் கற்புலனையும் உறுதி செய்யும் விடயத்தில் மிகத் தெளிவானவையாக உள்ளன. அந்தவிதத்தில் அவனின் செவியேற்றல் பண்பானது இறந்த காலம், நிகழ் எதிர்காலம் மற்றும் எழுவாய் ஆகிய சொல்லமைப்புக்களில் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, அவன் செவியேற்றவனாகவும் செவியேற்பவனாகவும் செவியேற்கக்கூடியனாகவும் இருக்கின்றான்.

பொதுவாக, அரேபியர்களின் மொழிவழக்கில் எதனையும் செவியேற்காத மற்றும் பார்க்காத ஒன்றை செவியேற்கக்கூடியது என்றோ பார்க்கக்கூடியது என்றோ சொல்வதில்லை. அந்த அடிப்படையில் மலை செவியேற்கக்கூடியது என்றோ பார்க்கக்கூடியது என்றோ யாரும் சொல்வதில்லை. ஏனெனில், அவை மலையுடைய விடத்தில் சாத்தியமற்றவையாகக் காணப்படுகின்றன.” (ஷர்ஹு அகீததில் வாஸிதிய்யா: 54)

-    இன்ஷா அல்லாஹ் தொடரும்

-    அபூஹுனைப்