இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

بسم الله الرحمن الرحيم

அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் கூறிய வணக்க வழிபாடுகளில் ஒன்றே இஃதிகாபாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுடைய காலங்களில் பள்ளிவாசலில் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்று உறுதியான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.

இஃதிகாப் இருப்பவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் மற்றும் இஃதிகாபுடன் தொடர்புபட்ட சட்டங்கள் பற்றிய விளக்கங்களை எம்மில் பலர் அறியாதவர்களாக உள்ளனர். எனவே, இச்சிறு தொகுப்பில் இஃதிகாப் தொடர்பான மார்க்கச் சட்டங்களைக் கேள்வி பதில் அமைப்பில் மிகச் சுருக்கமாக தொகுத்திருக்கின்றோம்.

அல்லாஹ் இதன் மூலம் எம்மனைவருக்கும் பயனளிப்பானாக! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

1.   இஃதிகாப் என்றால் என்ன?

பதில்: அரபு மொழியில் இஃதிகாப் என்ற வார்த்தைக்கு ஒரு இடத்தைப் பற்றிப்பிடித்திருத்தல் என்று பொருள் வழங்கப்படுகின்றது. மார்க்க அடிப்படையில் இஃதிகாப் என்பது: பள்ளிவாசலில் குறிப்பிட்ட அமைப்பில் அல்லாஹ்வுக்காகத் தங்கியிருத்தல் ஆகும்.

2.   இஃதிகாபின் சட்டம் என்ன?

பதில்: குர்ஆன், ஸுன்னா, இஜ்மா உடைய ஆதாரங்களைக் கொண்டு இஃதிகாப் இருப்பது விரும்பத்தக்க ஒரு காரியமாகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாப் இருக்கும்போது அவர்களுடன் ஒன்று கூடாதீர்கள்.” (அல்பகறா: 187)

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்யும் வரை ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். பின்பு அவரது மனைவிமார்கள் அவரது மரணத்திற்குப் பின்பு இஃதிகாப் இருந்தார்கள்.” (புஹாரி, முஸ்லிம்)

இப்னுல் முன்திர், இப்னு குதாமா, நவவி ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் இஃதிகாப் இருப்பது சுன்னத்தான காரியம் என்பது அறிஞர்களால் ஏகோபித்த முடிவு என்று கூறியிருக்கின்றார்கள்.

3.   இஃதிகாப் இருப்பவர் தான் நாடிய போது இஃதிகாபை துண்டித்து விட்டு வெளியேறலாமா?

பதில்: இஃதிகாப் இருப்பவர் தனது இஃதிகாபைத் துண்டித்து விட்டு தான் நாடிய போது வெளியேறிச் செல்லலாம். இஃதிகாபைப் பூரணப்படுத்திய பின்பே வெளியேறிச் செல்ல வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை.

4.   இஃதிகாப் இருப்பவர் நோன்பாளியாக இருப்பது அவசியமா?

பதில்: இஃதிகாப் இருப்பவர் நோன்பாளியாக இருக்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் காணப்படவில்லை. இஃதிகாப் இருப்பதற்கு நோன்பு அவசியமில்லை என்ற கருத்தை இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (பைஹகி)

5.   பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பது அவசியமா?

பதில்: அல்லாஹுத்தஆலா பள்ளிவாசலைக் கொண்டே இஃதிகாபைக் குறிப்பாக்கியுள்ளான். அல்லாஹுதஆலா கூறுகின்றான்: "பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாப் இருக்கும் போது அவர்களுடன் ஒன்று கூடாதீர்கள்.” (அல்பகறா: 187) எனவே, இஃதிகாப் பள்ளிவாசலில் மாத்திரமே அமைந்திருக்க வேண்டும்.

6.   எவ்வாறான பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருக்க முடியும்?

பதில்: ஜமாஅத் தொழுகை நடைபெறும் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இஃதிகாப் இருக்கலாம்.  அல்லாஹுதஆலா கூறுகின்றான்: "பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாப் இருக்கும் போது அவர்களுடன் ஒன்று கூடாதீர்கள்.” (அல்பகறா: 187)

அல்லாஹுத்தஆலா இவ்வசனத்தில் பள்ளிவாசல்கள் எனப் பொதுப்படையாகவே கூறியுள்ளான். இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஸஹீஹில் "அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இஃதிகாப் இருக்கலாம்” எனத் தலைப்பிட்ட பின்பு மேற்குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனத்தை இடம்பெறச் செய்துள்ளார்கள்.

7.   இஃதிகாபின் குறைந்த காலம் எவ்வளவு?

பதில்: இஃதிகாபின் குறைந்த காலம் ஆதாரங்களில் குறிப்பிடப்படவில்லை. ஆகக்குறைந்த நேரமும் இஃதிகாப் இருக்கலாம்.

8.   இஃதிகாப் இருப்பவர் மலசல தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?

பதில்: மலசல தேவைகளுக்காக இஃதிகாப் இருப்பவர் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாம் என்பது குறித்து இப்னுல் முன்திர், இப்னு குதாமா ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் அறிஞர்களின் ஒன்றுபட்ட முடிவைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

9.   ஏனைய தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?

பதில்: பள்ளிவாசலில் நிறைவேற்ற முடியாத அவசியத் தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு இஃதிகாப் இருப்பவர் வெளியேறிச் செல்லலாம். மேலும், அல்லாஹ் கட்டாயப்படுத்திய காரியங்களைச் செய்வதற்கும் வெளியேறிச் செல்லலாம். அது நீண்ட இடைவெளியை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.

10.  இஃதிகாப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில் ஈடுபட்டால் அவரது இஃதிகாபின் நிலை என்ன?

பதில்: இஃதிகாப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில் ஈடுபட்டால் அவரது இஃதிகாப் முறிந்து விடும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாப் இருக்கும்போது அவர்களுடன் ஒன்று கூடாதீர்கள்.” (அல்பகறா: 187)

இது அறிஞர்களின் ஒன்றுபட்ட முடிவு என்பதை இப்னுல் முன்திர், இப்னு குதாமா, குர்துபி ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் கூறியுள்ளனர்.

11.  அவசியமின்றி இஃதிகாப் இருப்பவர் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?

பதில்: இஃதிகாப் இருப்பவர் அவசியமின்றி வெளியேறிச் சென்றால் அவரது இஃதிகாப் முறிந்துவிடும்.

12.  கடைசிப் பத்தில் இஃதிகாப் இருக்க நாடுபவர் எப்போது இஃதிகாபை ஆரம்பிப்பார்?

பதில்: அவர் இருபதாம் நாள் சூரியன் மறைந்த பின்பு தனது இஃதிகாபை ஆரம்பிப்பார்.

13.  கடைசிப் பத்து முழுவதும் இஃதிகாப் இருப்பவர் பெருநாள் இரவிலும் இஃதிகாப் இருக்க முடியுமா?

பதில்: பெருநாள் இரவு சூரியன் மறைந்தவுடன் அவர் வெளியேறிச் செல்லலாம். ஏனென்றால், சூரியன் மறைந்தவுடன் அம்மாதம் நிறைவுபெறும்.

14.  இஃதிகாப் எப்போது கடமையாகும்?

பதில்: ஒருவர் இஃதிகாப் இருப்பதற்கு நேர்ச்சை வைத்தால் அவர் இஃதிகாப் இருப்பது கடமையாகும்.

15.  இஃதிகாப் இருப்பவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் எவை?

பதில்: நேரத்திற்கு தொழ வேண்டும், அல்குர்ஆன் ஓத வேண்டும், திக்ருகளில் ஈடுபட வேண்டும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும், அவசியமற்ற பேச்சுக்கள், செயல்களில் ஈடுபடக்கூடாது.

16.  இஃதிகாப் இருப்பவருக்கு ஆகுமான காரியங்கள் எவை?

பதில்: பள்ளிவாசலில் சாப்பிடுதல், குடித்தல், உறங்குதல், அழகான ஆடைகளை அணிதல், தலைவாரி அதைச் சுத்தப்படுத்தல், திருமணம் செய்தல், ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தல் ஆகிய காரியங்களில் இஃதிகாப் இருப்பவர் ஈடுபடலாம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்

-    தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்